Published : 11 Nov 2018 02:48 PM
Last Updated : 11 Nov 2018 02:48 PM

ரோஹித் மட்டும்தான் சரியாக விளையாடவில்லையா மற்றவர்கள்? - தேர்வுக்குழுவை விளாசிய சேவாக்

டெஸ்ட் போட்டித் தொடர்களில் ரோஹித் சர்மா மட்டும் சரியாக விளையாடவில்லை என்று தேர்வுக்குழுவினர் அவரை நீக்கினார்கள், அப்படியென்றால் மற்ற வீரர்கள் நன்றாக விளையாடினார்களா என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தேர்வுக்குழுவை கடுமையாக விளாசியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட ரோஹித் சர்மா அங்குச் சரியாக விளையாடவில்லை. இதனால், அடுத்து நடந்த ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர், இங்கிலாந்து தொடரில் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அஜின்கயே ரஹானே அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், ஆசியக் கோப்பை, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடியதையடுத்து, ஆஸ்திரேலியத் தொடருக்கு மீண்டும் ரோஹித் சர்மாவை தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தேர்வு செய்துள்ளார்.

ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியில் இருந்து நீக்கியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், தேர்வுக்குழுத் தலைவரை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

 

இலங்கைக்கு எதிராக உள்நாட்டில் ரோஹித் சர்மா விளையாடியபோது, சதமும், அரைசதமும் அடித்தார். ஆனால், தென் ஆப்பிரிக்க பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா சரியாக விளையாடவில்லை என்பதற்காக அணியல் இருந்து நீக்கப்பட்டு, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யாமல் விட்டுவிட்டார்கள்ரோஹித் சர்மா தென் ஆப்பிரிக்காவில் சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கும் தேர்வுக்குழுவினரிடம். நான் கேட்கிறேன், தென் ஆப்பிரிக்காவில் எத்தனை வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்?. ரோஹித் சர்மா மட்டும் விளையாடவில்லை என்று நீக்கக் காரணம் என்ன?.

தேர்வுக்குழுவின் என்னுடைய கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். ஏன் ரோஹித் சர்மாவை அணியில் இருந்து நீக்கினார்கள்?. ஒரு நாள் போட்டியில் 3 இரட்டை சதங்கள் அடித்தவர் ரோஹித் சர்மா. ஆனால், அவருக்கு டெஸ்ட் அணியில் இடமில்லை. இப்படி செய்வார்கள் தேர்வுக்குழுவினர் என்று நான் நினைக்கவில்லை. ஒருநாள் போட்டியில் பல்வேறு சாதனைகள் செய்த வீரர் ஒருவர், டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடியதில்லை என்று கிரிக்கெட் உலகில் யாரும் இல்லை என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 1,479 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 3 சதங்கள், 9 அரைசதங்கள் அடங்கும். மேற்கியத்தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக ரோஹித் சர்மா விளையாடியதையடுத்து, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x