

தோனிதான் எனக்குப் பிடித்த வீரர் மற்றும் கேப்டன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் மகளிர் அணியின் முன்னாள் கேப்டனும், பந்து வீச்சாளருமான சனா மிர் தெரிவித்திருக்கிறார்.
கிரிக்கெட் தொடர்பான தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சனா மிர் பங்கேற்றார்.
அதில் நீங்கள் எதிர்காலத்தில் எந்த கிரிக்கெட் வீரரைப் போல் ஆக விரும்புகிறீகள் என்ற கேள்விக்கு சனா பதிலளித்தபோது, ”பாகிஸ்தானைப் பொறுத்தவரை எனக்கு இம்ரான் கான் பிடிக்கும். மற்றபடி தோனிதான் எனக்குப் பிடித்த வீரர். எனக்குப் பிடித்த கேப்டனும் தோனிதான்'' என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் மகளிர் அணியின் கிரிக்கெட்டில் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் சனா மிர். இவர் தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள ஒரு நாள் போட்டிகளுக்கான மகளிர் பந்து வீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தைப் பெற்றிருக்கிறார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சனா குறிப்பிடும்போது, ”இது அணியின் கூட்டு முயற்சியாகும். பெரிய அணிகளுடன் எனக்கு விளையாட வாய்ப்பளித்த ஐசிசிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் பயிற்சியாளர் மார்க் கோல்ஸுக்கு நன்றி. அவர் எனது வயதைவிட எனது திறமையை அதிகம் பார்த்தார்” என்று தெரிவித்துள்ளார்