

புதுடெல்லி: ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்வர் 25 முதல் டிசம்பர் 13 வரை சிலி நாட்டில் உள்ள சான்டியாகோ நகரில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோதி சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தொடரில் இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் டிசம்பர் 1-ல் நமீபியாவுடன் மோதுகிறது. தொடர்ந்து டிசம்பர் 3-ம் தேதி ஜெர்மனியுடனும், டிசம்பர் 5-ம் தேதி அயர்லாந்துடனும் இந்திய அணி பலப்பரீட்சை நடத்துகிறது. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். நாக் அவுட் சுற்று டிசம்பர் 7 முதல் 13 வரை நடைபெறுகிறது.
அணி விவரம்: நிதி, எங்கில் ஹர்ஷா ராணி மின்ஸ் (கோல்கீப்பர்கள்), மனிஷா, லால்தன்லுஅலங்கி, சாக் ஷி சுக்லா, பூஜா சாஹூ, நந்தினி (டிஃபன்டர்கள்), சாக் ஷி ராணா, இஷிகா, சுனெலிதா டோப்போ, ஜோதி சிங், கைடெம் ஷிலைமா சானு, பினிமா தன் (நடுகள வீராங்கனைகள்), சோனம், பூர்ணிமா யாதவ், கனிகா சிவாச், ஹினா பானோ, சுக்வீர் கவுர் (முன்கள வீரர்கள்).