

கான்பெரா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் புதன்கிழமை தொடங்கியது.
கான்பெராவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீசியது. இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். 14 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். பின்னர் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் களத்துக்கு வந்தார்.
இந்திய அணி 9.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மன் கில் 37, சூர்யகுமார் யாதவ் 39 ரன்களுடன் களத்தில் இருந்தனர். மழை காரணமாக ஆட்டம் இரண்டு முறை தடைபட்டது. மழை பொழிவு தொடர்ந்த காரணத்தால் ஆட்டத்தில் முடிவு எட்டப்படாமல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொடரின் அடுத்த போட்டி வரும் 31-ம் தேதி மெல்பர்ன் நகரில் நடைபெறுகிறது.