ஜூடோவில் வெண்கலம் வென்றார் கபில் பர்மர்: பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 25-வது பதக்கம்!

ஜூடோவில் வெண்கலம் வென்றார் கபில் பர்மர்: பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 25-வது பதக்கம்!
Updated on
1 min read

பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரின் ஆடவருக்கான ஜூடோ 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் கபில் பர்மர் வெண்கலம் வென்றார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 25ஆக உயர்ந்தது.

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர்.

இதில் இன்று (செப்.05) நடந்த ஆடவருக்கான ஜூடோ 60 கிலோ ஜே1 பிரிவில் இந்தியா சார்பில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கபில் பர்மர் பங்கேற்றார். இதில் தன்னை எதிர்த்து களமிறங்கிய பிரேசில் வீரரான எலியேல்டன் டி ஒலிவேராவை 10-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 25ஆக உயர்ந்தது. இதுவரை இந்தியாவுக்கு 5 தங்கம், 9 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளது. பாராலிம்பிக் தொடரில் ஜூடோவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை.

மத்திய பிரதேசத்தின் ஷிவோர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த பர்மர், சிறுவயதில் தண்ணீர் குழாய் ஒன்றில் இருந்து கசித்த மின்சாரத்தால் தாக்கப்பட்டு ஆறு மாதகாலம் கோமாவில் இருந்தவர். பர்மரின் தந்தை டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். தனது சகோதரருடன் சேர்ந்து டீக்கடை நடத்திவந்த பர்மர், ஜூடோ மீதான ஆர்வத்தால் முறையான பயிற்சிகளை மேற்கொண்டார். கடந்த 2022 ஆசிய விளையாட்டுகளில் கலந்து கொண்ட அவர், வெனிசுலா வீரரை இதே போல 10-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in