Published : 24 May 2018 12:17 PM
Last Updated : 24 May 2018 12:17 PM

கோலி விளையாடுவாரா? இங்கிலாந்து டெஸ்ட் தொடர், கவுண்டி போட்டியை தவிர்க்கலாம்?

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி போட்டி, டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பதைத் தவிர்க்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி ஜூலை மாதம் டெஸ்ட், ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அதற்குமுன்பாக அங்கு செல்லும் விராட் கோலி கவுண்டி அணியான சர்ரேயில் இடம் பெற்று ஒருமாதம் விளையாட ஒப்பந்தம் செய்திருந்தார். இதன் காரணமாக அடுத்த மாதம் பெங்களூருவில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கூட விராட் கோலி பங்கேற்பதைத் தவிர்த்தார்.

இந்நிலையில், விராட் கோலியின் முதுகு தண்டுவடத்தில் உள்ள டிஸ்க் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் நடத்தப்பட்ட மருத்துவ சிகிச்சையில் தெரியவந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மும்பை கார் பகுதியில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் பணியாற்றும் எலும்பு சிகிச்சை நிபுணர், விராட் கோலிக்கு அளித்த சிகிச்சையின் போது அவருக்கு தண்டுவடப் பிரச்சினை இருப்பதைக் கண்டுபிடித்தார். ஓய்வு இல்லாமல் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி பங்கேற்று வருவதால், அவரின் முதுகு தண்டுவடத்தில் இதுபோன்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அடுத்துவரும் இங்கிலாந்து தொடர், கவுண்டி போட்டிகளில் அவர் பங்கேற்காமல் சிகிச்சையும், ஓய்வும் எடுப்பது அவசியம் என கோலியிடம் மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

மும்பையில் இருந்து வெளிவரும் ஒரு ஆங்கில நாளேட்டுக்கு அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் அளித்த பேட்டியில் கூறுகையில், ''விராட் கோலியின் முதுகு தண்டுவடத்தில் செல்லும் நரம்புகளில் லேசாக சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால், அவருக்கு அவ்வப்போது வலி ஏற்பட்டுள்ளது. நரம்புகள் பாதிக்கப்படுவதை தொடக்கத்திலேயே கண்டுபிடித்துவிட்டோம். இப்போது தொடர் சிகிச்சை அளித்தால் அறுவை சிகிச்சையின்றி ஓய்வு மூலம் கோலியை குணப்படுத்திவிடலாம். ஆனால் உடனடியாக கவனிக்காமல் தொடர்ந்து விளையாடினால், நீண்டநாள் செல்லும் போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிவரும்.

இதனால், கோலி இங்கிலாந்து தொடர், கவுண்டி போட்டியில் விளையாடுவதைத் தவிர்த்து, நல்ல ஓய்விலும், சிகிச்சையும் எடுக்குமாறு நாங்கள் அவரிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்'' எனத் தெரிவித்தார்.

ஆனால், இது குறித்து விராட் கோலியின் தரப்பில் இருந்து எந்தவிதமான கருத்தும் இல்லை. அதேசமயம், விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்து அறிந்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அணியின் மிகப்பிரிய நம்பிக்கை நட்சத்திர வீரருக்கு இதுபோன்ற காயம் ஏற்படுவது வருத்தமளிக்கிறது. அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாத அளவுக்கு போதுமான ஓய்வு அளிக்கப்படும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி விளையாடமாட்டார், இந்தக் காயத்தால், கவுண்டியிலும், இங்கிலாந்து தொடரிலும் விளையாடுவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யப்படும்'' எனத் தெரிவித்தார்.

இங்கிலாந்து தொடருக்கு பெரிய அளவில் தயாராவதற்காகவே கோலி, கவுண்டி அணியில் ஒப்பந்தம் செய்துள்ளார். இப்போது கவுண்டி அணியிலும், இங்கிலாந்து தொடரிலும் விளையாடாமல் கோலி ஓய்வெடுக்க நேர்ந்தால், அவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமையும். மேலும், கவுண்டி தொடரில் கோலியின் விளையாட்டைக் காண இருப்பவர்களுக்கு அது பெரும் ஏமாற்றமாக இருக்கும்.

கடந்த முறை இங்கிலாந்து பயணத்தின் போது விராட் கோலி 5 டெஸ்ட் போட்டிகளில் 134 ரன்கள் மட்டுமே சேர்த்து, சராசரியாக 13 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். இதுபோன்ற சூழல் இந்தத் தொடரிலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சர்ரே கவுண்டி அணியில் விளையாடி அதன்பின் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க கோலி திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“5 வருடங்களுக்கு யார் ஆட்சி செய்தாலும், முடிந்தவரைக்கும் அவருக்கு ஒத்துழையுங்கள்” - விஜய் ஆண்டனி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x