Published : 11 Apr 2018 01:13 PM
Last Updated : 11 Apr 2018 01:13 PM
சென்னை சூப்பர்ஸ் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியைக் காட்டிலும் ரொம்ப கூலாக களத்தில் வேறு எந்த வீரரும் இருக்க முடியாது என்று அந்த அணி வீரர் சாம் பில்லிங்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் வெற்றிக்கு அருகே அழைத்து வந்தார்.
23 பந்துகளைச் சந்தித்த பில்லிங்ஸ் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சாம் பில்லிங்ஸ் அதிரடி பேட்டிங்தான் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது, ஆட்டநாயகன் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது.
வெற்றிக்கு பின் ஊடகங்களிடம் சாம் பில்லிங்ஸ் பேசியாதாவது:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் முறையாக இடம் பெற்று, அதிலும் உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனியுடன் இணைந்து முதல் முறையாக விளையாடினேன். இருவரின் பாட்னர்ஷிப் 50 ரன்களுக்கு மேல் நீடித்தது.
களத்தில் தோனியினைப் போல் பொறுமையாக, அமைதியாக, ரொம்ப கூலாக இருப்பதைப்போல், வேறு எந்த வீரரும் இருக்க முடியாது. அவருடன் இணைந்து விளையாடியதால் என்னவோ அவரின் குணங்கள் எனக்கும் அந்த நேரத்தில் பரவிவிட்டது. அதனால், இருவருக்கும் இடையேயான பாட்னர்ஷிப் நீண்டநேரம் நீடித்தது.
அதிகமான டாட் பந்துகளைவிடாதீர்கள், பந்துகளை வீணாக்காமல் ஓடிக்கூட ரன்களை எடுக்கலாம் என்று அடிக்கடி தோனி என்னிடம் கூறினார். விக்கெட்டுகளுக்கு இடையே விரைவாக ஓடும் திறமையை தோனி பெற்று இருக்கிறார். இதனால், தொடக்கத்தில் நான் நிதான ஆட்டத்தை கையாண்டு, அதன்பின் எனது கிடைத்த வாய்ப்பில் எனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினேன். நான் அடித்து விளையாடும்போது, தோனி என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தார்.
இவ்வாறு சாம் பில்லிங்ஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT