Last Updated : 12 Apr, 2018 12:19 PM

 

Published : 12 Apr 2018 12:19 PM
Last Updated : 12 Apr 2018 12:19 PM

சிஎஸ்கே அணிக்கு பின்னடைவு: அடுத்த இரு போட்டிகளில் ரெய்னா விளையாடமாட்டார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா அடுத்துவரும் இரு போட்டிகளுக்கு விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொஹாலியில் வரும் 15-ம்தேதி கிங்ஸ் லெவன் அணியுடன் நடக்கும் போட்டியிலும், 20-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ்அணியுடன் நடக்கும் போட்டியிலும் சுரேஷ் ரெய்னா விளையாடமாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிவிட்டார், முக்கிய வீரர் டூப்பிளசிஸ் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை, இப்போது சுரேஷ் ரெய்னாவும் அடுத்த இரு போட்டிகளுக்கு விளையாடமாட்டார் என்பது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.

முழுஉடல் தகுதி இருந்தும் முரளி விஜய் இன்னும் களமிறக்கப்படாமல் இருக்கிறார். இப்போது சுரேஷ் ரெய்னா அடுத்த இரு போட்டிகளுக்கு விளையாடாத நிலையில், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் போது, சுனில் நரேன் பந்துவீச்சில் ஒரு ரன் எடுக்க முற்பட்டபோது, சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு வலதுகாலில் தசைநாரில் காயம் ஏற்பட்டது.

இதனால், அடுத்த ஒருவாரத்துக்கு அவருக்கு ஓய்வு தேவை என்று அணியின் உடல்தகுதி வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாகவே சுரேஷ் ரெய்னா அடுத்த 2 போட்டிகளுக்கு விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரிநதி நீர் பங்கீட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பின் படி காவிரி மேம்பாட்டு வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதனால், சென்னையில் நடந்த சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் பல்வேறு அமைப்பினர் இடையூறு செய்தனர். இதன் காரணமாக, சென்னையில் அடுத்து நடக்க வேண்டிய போட்டிகள் அனைத்தும் புனேவுக்கு மாற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x