Published : 10 May 2024 09:24 PM
Last Updated : 10 May 2024 09:24 PM

சாய் சுதர்சன், கில் ‘சம்பவ’ சதம்: சிஎஸ்கேவுக்கு 232 ரன்கள் இலக்கு @ ஐபிஎல்

சுப்மன் கில் - சாய் சுதர்சன்

அகமதாபாத்: ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 231 ரன்களை குவித்துள்ளது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த முடிவு தவறானது என்பதை, குஜராத் அணியின் ஓப்பனர்களாக இறங்கிய ஷுப்மன் கில்லும், சாய் சுதர்சனும் உணர்த்தினர்.

இருவரும் பாட்னர்ஷிப் அமைத்து சிஎஸ்கே பவுலர்களுக்கு தண்ணீர் காட்டினர். சாய் சுதர்சன் 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். 25 பந்துகளில் கில் அரைசதம் எட்டினார். சிக்ஸரும், பவுண்டரிகளுமாக மைதானத்தில் பந்துகள் பறந்துகொண்டிருக்க, அவற்றை தடுக்க முடியாமல் சிஎஸ்கே வீரர்கள் திணறினர்.

15 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி இருவரும் இணைந்து 190 ரன்களை குவித்தனர். ஒரு கட்டத்தில் ஐபிஎல் தொடரின் அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சாதனையை குஜராத் நெருங்குமா என்ற கேள்வி எழுந்தது.

50 பந்துகளில் முதல் ஆளாக கில் சதமடித்து மிரட்டினார். அதேபோல 50 பந்துகளில் சாய் சுதர்சனும் சதமடித்தார். அவரின் அந்த சிக்ஸ் அரங்கத்தை அதிரவைத்தது. இரண்டு ஓப்பனர்கள் கூட்டணி அமைத்து சதம் விளாசியது ரசிகர்களிடைய கவனம் பெற்றது.

சதம் விளாசிய மகிழ்ச்சியில், அடுத்த பந்தில் தூக்கி அடிக்க முயன்ற சுதர்சன் கேட்ச் கொடுத்து 103 ரன்களில் வெளியேறினார். ஒருவழியாக சிஎஸ்கேவுக்கு முதல் விக்கெட்டை பெற்றுக்கொடுத்தார் துஷார் தேஷ்பாண்டே.

சுதர்சனின் பிரிவை தாங்காமலோ என்னவோ கில் அதே ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி 104 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். தேஷ்பாண்டே காட்டில் மழை. 2 விக்கெட்டை அள்ளினார்.

இறுதி பந்தில் ஷாருக்கான் 2 ரன்களுக்கு அவுட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 231 ரன்களை குவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x