Published : 10 May 2024 09:17 AM
Last Updated : 10 May 2024 09:17 AM

PBKS vs RCB | ‘தரம்தான் முக்கியம்’ - கோலி; ‘சிறந்த ஆட்டம்’ - டூப்ளசி

கோலி மற்றும் டூப்ளசி

தரம்சாலா: நடப்பு ஐபிஎல் சீசனின் 58-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 60 ரன்களில் வீழ்த்தியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்த தோல்வியால் இரண்டாவது அணியாக முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி வீரர் விராட் கோலி மற்றும் அணியின் கேப்டன் ஃபாப் டூப்ளசி தெரிவித்தது. தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தி வருகிறது ஆர்சிபி. 12 போட்டிகளில் 5 வெற்றிகளை அந்த அணி பெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தில் உள்ளது.

விராட் கோலி: “எனக்கு எண்களைக் காட்டிலும் தரம்தான் முக்கியம். அது எனக்கு நல்ல பலன் தருகிறது. ஆட்டம் குறித்த புரிதல் காரணமாக குறைந்த நேரம் பயிற்சி மட்டும் மேற்கொள்ள முடிகிறது. கடந்த முறை நான் களத்தில் செய்ததை மீண்டும் செய்ய முயற்சிக்கிறேன். ஆட்டத்தின் அம்சத்தை மேம்படுத்துவதே நோக்கம். இதுவொரு செயல்முறை. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஸ்லாக்ஸ்வீப் ஆடுகிறேன். இதை நான் கடந்த காலங்களில் செய்துள்ளேன்.

நான் ரிஸ்க் எடுத்து ஆட வேண்டும் என்று எனக்கு தெரியும். எனது ஸ்ட்ரைக் ரேட்டில் கவனம் செலுத்துகிறேன். அது அணிக்கும் அவசியமானது. நாங்கள் தொடர் தோல்விகளை தழுவினோம். அதன் பின்னர் எங்களுக்குள் கலந்து பேசினோம். நாம் அப்படி ஆடி ரசிகர்களை விரக்தியடைய செய்ய வேண்டாம் என முடிவெடுத்தோம். அந்த பொறுப்பு ஒவ்வொருவருக்கும் அவசியம். அதற்கான நம்பிக்கை கிடைத்தது. வெற்றிப் பாதைக்கு திரும்பினோம்” எனத் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் 47 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார் கோலி. இந்த சீசனில் 12 இன்னிங்ஸ் ஆடி 634 ரன்கள் எடுத்துள்ளார். நான்காவது முறையாக ஐபிஎல் சீசனில் 600+ ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் கே.எல்.ராகுலின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.

டூப்ளசி: “இது சிறந்த ஆட்டமாக அமைந்தது. கடந்த 5-6 போட்டிகளாக நாங்கள் 200+ ரன்களை எடுத்துள்ளோம். ஏற்கனவே செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறோம் என எங்களுக்குள் பேசினோம். பேட்டிங்கை பொறுத்தவரையில் ஆக்ரோஷம் தேவை என முடிவு செய்தோம். பவுலிங் யூனிட்டில் 6-7 ஆப்ஷன்கள் இருக்கின்றன. அதனால் விக்கெட் வீழ்த்துவது முக்கியம் என்று பேசினோம்.

ஆட்டத்தில் சிறந்து செயல்பட ஃபார்ம் அவசியம். கொஞ்சம் அதிரஷ்டமும் தேவை. இந்த சீசனின் தொடக்கத்தில் எங்கள் அணி வீரர்கள் சிலர் விக்கெட் வீழ்த்தவும், ரன் எடுக்கவும் செய்தனர்.

இப்போது அனைவரும் அதை செய்கிறார்கள். அது அவர்களது ஆட்டத்திறனின் வெளிப்பாடு. எங்கள் மீது நாங்கள் கவனம் செலுத்தினோம். எங்களது ஆட்ட பாணியை நாங்கள் இப்படி தொடர விரும்புகிறோம். அதன் மூலம் எங்கள் அணி சிறந்த அணி என்பதை நிரூபிக்கும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x