Published : 09 May 2024 09:30 AM
Last Updated : 09 May 2024 09:30 AM

SRH vs LSG | கே.எல்.ராகுலிடம் களத்திலேயே விரக்தியை வெளிப்படுத்திய சஞ்சீவ் கோயங்கா

சஞ்சீவ் கோயங்கா மற்றும் கே.எல்.ராகுல்

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 57-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயித்த 166 ரன்கள் இலக்கை 58 பந்துகளில் எட்டியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இந்நிலையில், இந்த ஆட்டம் முடிந்ததும் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலிடம் களத்திலேயே விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா.

இந்த தோல்வி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், புள்ளிகள் பட்டியலில் டாப் 4 இடங்களில் இருக்கும் அணிகள் தான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். கடந்த 2022 சீசன் முதல் லக்னோ அணி, ஐபிஎல் களத்தில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு சீசனிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு அந்த அணி முன்னேறியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் ஃப்ரான்சைஸ் முறையில் நடத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு அணிக்கும் உரிமையாளர்கள் இருப்பார்கள். பெரும்பாலும் அணி தேர்வு தொடங்கி அனைத்திலும் அவர்களது தலையீடு இருக்கும். அது அனைவரும் அறிந்ததே. ஆனால், புதன்கிழமை அன்று நடந்த சம்பவம் முற்றிலும் வேறானதாக இருந்தது. சஞ்சீவ் கோயங்காவின் இந்த செயலை கிரிக்கெட் ஆர்வலர்கள், ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைதளத்தில் விமர்சித்து இருந்தனர்.

‘ஐபிஎல் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட் என்பது எங்களுக்கு புரிகிறது. இது மாதிரியான தோல்வி பாதிப்பை தரவே செய்யும். ஆனால், குறைந்தபட்சம் இந்த மாதிரியான செயல்களை திரைமறைவில் செய்யலாமே. கேமரா கண்களின் முன்பு ஏன் இப்படி? இது ராகுலின் நன்மதிப்பை குலைக்கும் வகையில் உள்ளது’ என பெரும்பாலான நெட்டிசன்கள் தங்களது பதிவிலும், கமெண்டிலும் தெரிவித்திருந்தனர். அடுத்த சீசனில் ராகுல், லக்னோ அணிக்காக ஆடுவதே சந்தேகம் என்ன சிலர் சொல்லி இருந்தனர்.

இதற்கு முன்பும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் பகிரங்கமாக அனைவரது பார்வைக்கும் தெரிந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டேவிட் வார்னர் இடையிலான சம்பவம். 2021 சீசனில் கேப்டனாக வார்னர் களம் கண்டார். இருந்தும் அவரது மோசமான ஃபார்ம் காரணமாக அந்த பொறுப்பில் இருந்து விடுவித்தது அணி நிர்வாகம். அதே சீசனில் ஆடும் லெவனில் இடம்பெறும் வாய்ப்பை இழந்தார். தொடர்ந்து பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அணிக்கு சப்போர்ட் செய்தார். அப்போது அது பேசு பொருளானது.

கடந்த 2017 சீசனில் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நீக்கப்பட்டார். ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது அது விவாதத்தை எழுப்பியது. அந்த அணியின் உரிமையாளரும் சஞ்சீவ் கோயங்காதான். 2017 சீசனுக்கு பிறகு அந்த அணி கலைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x