Published : 02 May 2024 11:00 PM
Last Updated : 02 May 2024 11:00 PM

T20 WC 2024 | ‘4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை என்பதில் உறுதியாக இருந்தேன்’ - கேப்டன் ரோகித்

ரோகித் சர்மா

மும்பை: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. பிரதான அணியில் இடம்பெற்றுள்ள 15 வீரர்களில் நான்கு பேர் சுழற்பந்து வீச்சாளர்கள். அது கலவையான
ரியாக்‌ஷனை ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் வல்லுநர்கள் மத்தியில் பெற்றுள்ளது.

இந்த சூழலில் அணித் தேர்வு குறித்து பிசிசிஐ சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்தது. “அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

அதில் இருவர் பேட் செய்யும் திறன் கொண்ட ஆல்ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் அக்சர் படேல் உள்ளனர். சஹல் மற்றும் குல்தீப் என இரண்டு அட்டாக்கிங் சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

எதிரணியை பொறுத்து சுழற்பந்து வீச்சாளர்களை முடிவு செய்வோம். அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் ஏன் என்பதற்கான காரணத்தை மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சென்றதும் பங்கேற்கும் முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்கிறேன்.

அணியில் ஸ்பெஷலிஸ்ட் ஆஃப் ஸ்பின்னர் இடம்பெறுவது குறித்து தேர்வாளர்களுடன் விவாதித்தோம். வாஷிங்டன் சுந்தர் அண்மைய போட்டிகளில் அதிகம் விளையாடவில்லை. அஸ்வினும் அதே நிலையில் உள்ளார். இருந்தும் அஸ்வின் அல்லது அக்சர், இருவரில் யார் என்பது குறித்தும் விவாதித்தோம்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார் அக்சர். அவர் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் என்ற ஆப்ஷனையும் தருகிறார். அதனால் அக்சரை தேர்வு செய்தோம்” என ரோகித் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x