Published : 26 Apr 2024 04:12 PM
Last Updated : 26 Apr 2024 04:12 PM

“ரிஸ்க் எடுக்கணும்!” - கோலியின் ஆட்டத்தை விமர்சித்த கவாஸ்கர்

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர் தோல்விக்கு ஒருவழியாக முடிவுரை எழுதியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. வியாழக்கிழமை அன்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் பெங்களூரு அணி 206 ரன்கள் குவித்திருந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி அரை சதம் விளாசி இருந்தார். நடப்பு சீசனில் 9 போட்டிகளில் விளையாடி 430 ரன்கள் அவர் குவித்துள்ளார். இதன் மூலம் இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் அவர் முதலிடத்தில் உள்ளார். 1 சதம் மற்றும் 3 அரை சதங்களை அவர் எடுத்துள்ளார். இருந்தும் அவரது இன்னிங்ஸ் அணுகுமுறை விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

“ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் வெறும் சிங்கிள் மட்டுமே கோலி எடுத்துக் கொண்டிருந்தார். தினேஷ் கார்த்திக், லோம்ரோர் போன்ற வீரர்கள் அடுத்ததாக பேட் செய்ய இருந்தனர். அதனால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து ஆட அவர் முயற்சி செய்து இருக்க வேண்டும். ரஜத் பட்டிதாரை பாருங்கள். ஒரே ஓவரில் நான்கு சிக்ஸர்கள் விளாசி இருந்தார். முதல் மூன்று சிக்ஸர்களை விளாசிய பிறகு அவர் சிங்கிள் எடுத்து இருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். அது மாதிரியான அணுகுமுறை தான் ஆர்சிபி அணிக்கு இப்போது தேவை” என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத் அணிக்கு எதிராக 43 பந்துகளில் 51 ரன்களை கோலி எடுத்தார். இதில் அவர் எதிர்கொண்ட முதல் 18 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். அடுத்த 25 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு சீசனில் அவரது ஸ்லோ ஸ்ட்ரைக் ரேட் பேசுபொருளாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x