Published : 26 Apr 2024 03:06 PM
Last Updated : 26 Apr 2024 03:06 PM

ஐபிஎல் ‘பிளாக் டிக்கெட்’களுக்கு எதிரான கோரிக்கையை பரிசீலிக்க பிசிசிஐ-க்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதற்கு எதிராக அளித்த புகார் மனுவை பரிசீலிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண நியாயமான கட்டணத்தில் டிக்கெட் பெறுவது இமாலய இலக்காக உள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறது. ஆனால் விற்பனை தொடங்கிய சிறிது நேரத்திலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன.

சில சமூக விரோதிகள், டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி, அதனை 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர்.இதனால், குறைந்த கட்டண டிக்கெட்டுகள் கூட 14 ஆயிரம் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. டிக்கெட்டுகளை வாங்கி அதிக விலைக்கு விற்பதன் பின்னணியில், மாஃபியா கும்பல் இயங்கி வருகிறது.

சமீபத்தில், ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து எட்டு டிக்கெட்டுகளும், 31 ஆயிரத்து 500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த மாஃபியா கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விதிகளை மீறி செயல்படும் சேப்பாக்கம் மைதான அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில், கள்ளச் சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்வது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐபிஎல் விளையாட்டு போட்டிகள் முடியும் நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவெடுக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x