Published : 28 Mar 2024 09:22 AM
Last Updated : 28 Mar 2024 09:22 AM

பும்ராவையே ஓரங்கட்டும் அளவுக்கு ஹர்திக் என்ன அப்பாட்டக்கரா? - ஐபிஎல் சலசலப்பு

அன்று குஜராத் டைட்டன்ஸிடம் தோல்வியாவது பரவாயில்லை, நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மும்பைக்குக் கொடுத்த உதை காலாகாலத்துக்கும் மறக்க முடியாத உதையாகி விட்டது. குறிப்பாக புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் திமிர்த்தனமான கேப்டன்சி கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றன.

ஒருபுறம் அன்று குஜராத் ரசிகர்கள் அவரை மைதானத்திலேயே வார்த்தைகளால் வறுத்து எடுத்தனர் என்றால் நேற்று சன் ரைசர்ஸ் பேட்டர்கள் மட்டையால் வறுத்து எடுத்து விட்டனர். அதுவும் குறிப்பாக பும்ரா இருக்கும் போது பாண்டியா பந்தைத் தூக்கிக் கொண்டு வீசுவது ஒரு காமெடி என்றால் அறிமுகமில்லாத தென் ஆப்பிரிக்கா பவுலர் கவீனா மபக்கா என்பவரிடம் கொடுத்து செம சாத்து வாங்கியது ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன்சி காமன் சென்ஸ் இருக்கிறதா இல்லையா என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றது.

இந்திய அணியின் மூன்று வடிவ கேப்டன் ரோஹித் சர்மாவை விட பாண்டியா என்ன பெரிய அப்பாடக்கரா என்று ரசிகர்கள் கொந்தளித்துப் போய் அவரை கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் என்றால் முன்னாள் வீரர்களும் இப்போது பாண்டியா வசை என்னும் கோஷ்டி கானத்தில் இணைந்து விட்டனர்.

நேற்று ஹர்திக் பாண்டியா செய்த கந்தரகோல கேப்டன்சியினால் ஒருக் கட்டத்தில் ரோஹித் சர்மா கையில் எடுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று, ஆனால் அப்போதே மேட்ச் முடிந்து விட்டதற்குச் சமம்தான். “ஹர்திக் பாண்டியாவுக்கு வெறும் திமிரும், ஈகோவும் தான் இருக்கிறதே தவிர கிரிக்கெட் மூளை இருப்பதாகத் தெரியவில்லை” என்று விமர்சிகர்கள் அவரை விமர்சிப்பது ஹர்திக் பாண்டியா காதுகளுக்கு விழுகிறதோ இல்லையோ, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகிகள் காதுகளுக்கு விழவே செய்யும்.

முன்னாள் வீரர் இர்பான் பத்தான், “ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி மிகச் சாதாரணமாக இருந்தது என்பதுதான் குறைந்தபட்சமாகக் கூற முடியும். ஹைதராபாத் பேட்டர்கள் போட்டு சாத்தி எடுத்து வருகின்றனர், மைதானமே ரன்களரியாகிக் கொண்டிருக்கும் போது பும்ராவைக் கொண்டு வராமல் தாமதம் செய்தது என்னுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது” என்று சாடியுள்ளார்.

முன்னாள் வீரர் யூசுப் பத்தான் தன் வலைத்தளத்தில், “கடைசி ஓவரை ஸ்பின்னர் வீசியதன் தாத்பரியம் என்னவென்று புரியவில்லை” என்று சாடியுள்ளார்.

டாம் மூடி, “ஆட்டமே முடிந்து விட்டது, ஆனால் உங்கள் பெரிய பவுலர் பும்ரா ஒரு ஓவர்தான் போட்டிருந்தார்” என்று கிண்டல் செய்துள்ளார்.

யூசுப் பத்தான் இன்னொரு ட்வீட்டில், “11 ஓவர்களில் எஸ்.ஆர்.எச். அணி 160 ரன்களை விளாசிய போது உங்கள் சிறந்த பவுலர் பும்ரா ஒரு ஓவரை மட்டுமே வீசியிருந்தார். இது மோசமான கேப்டன்சி இல்லாமல் வேறு என்னவாம்?” என்று வினவியிருந்தார்.

இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வான், “விளையாட்டுலக வரலாற்றில் ரோஹித் சர்மாவை கேப்டன்சியிலிருந்து தூக்கியது போன்ற விசித்திரமான நிகழ்வு நடந்துள்ளதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதோடு நேற்று ஆட்டம் முடிந்தவுடன் அணி உரிமையாளருடன் ரோஹித் சர்மா நடத்திய காட்டமான விவாதம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சிக்கு அல்பாயுசுதான் என்று பலரும் ஊகங்களை வெளியிட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x