Published : 18 Mar 2024 02:25 PM
Last Updated : 18 Mar 2024 02:25 PM

“அணித் தேர்வில் முட்டாள்கள் தலையிடக் கூடாது” - கோலி விவகாரத்தில் முன்னாள் வீரர் சாடல்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டித் தொடரில் விராட் கோலி இந்திய அணியில் தேவையில்லை என்ற சில செய்தி பரவும் நிலையில், அது குறித்து கடும் விமர்சனங்களும் வசைகளும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், பிசிசிஐ செயலர் ஜெய் ஷாவை முன்னாள் இந்திய அதிரடி ஆல்ரவுண்டர் கீர்த்தி ஆசாத், கடுமையாக விமர்சித்துள்ளது பரபரப்பாகியுள்ளது.

விராட் கோலி டி20 உலகக் கோப்பைக்குத் தேவையில்லை. அவர் ஸ்லோவாக ஆடுகிறார் என்றெல்லாம் கூறி அவரை தேர்வு செய்யாமல் இருப்பதற்கான முன்னோட்டமாக சில கருத்துக்கள் பரப்பப்பட்டன. எந்த ஒரு தீவிர நிலைப்பாட்டு முடிவு எட்டப்படுவதற்கும் ஒரு வெளிப்படையான நிகழ்முறைகள் உள்ளன.

பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் உள்ளன. இதுதான் ஜனநாயக நடைமுறை. ஆனால் இப்போதெல்லாம் மீடியாக்களில் ஏதாவது ஒன்றை அல்லது தீவிர அதிர்ச்சி முடிவை லேசாகக் கசிய விடுவது, ரியாக்‌ஷன் எப்படி இருக்கிறது என்று நூல் விட்டுப் பார்ப்பது, எதிர்ப்பு தீவிரமாக இருந்தால் நாங்கள் ஒன்றுமே சொல்லவில்லை. இதெல்லாம் மீடியா கற்பிதங்கள் என்று கூறிவிட வேண்டியது.

அப்படி எதிர்ப்புகள் இல்லாமல் விஷயம் பிசுபிசுத்துப் போய்விட்டால், தீவிர முடிவை ஏதோ இயல்பாக நடைபெறும் விஷயம் போல் நார்மலைஸ் செய்வது. அதாவது விராட் கோலியைத் தூக்கிவிட்டு நாங்கள்தான் ஏற்கெனவே சொல்லிவிட்டோமே என்பது போல் விஷயம் நார்மலைஸ் ஆகுமாறு விட்டு விடுவது. இவையெல்லாம் பெரும் போங்கு நடைமுறைகளே.

ஆஸ்திரேலியாவில் கேப்டன் மைக்கேல் கிளார்க் அடிக்கடி காயமடைந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவரை அழைத்து இன்னும் 2-3 ஆண்டுகள் நீங்கள் கேப்டனாகவோ அணியிலோ ஆட வேண்டுமென்றால் காயத்தின் நேர்வு எப்படி என்று விவாதிப்பார்கள், அடிக்கடி காயமடையும் காயமா அல்லது பூரண குணம் சாத்தியமா என்றெல்லாம் கேட்டு விட்டு கடைசியில் முடிவுக்கு வருவார்கள். அதிலும் முடிவை மைக்கேல் கிளார்க்கே அறிவித்து விடுவார். ரிக்கிப் பண்டிங், ஸ்டீவ் வாஹ், ஷேன் வார்ன் என்று எத்தனை பெரிய ஸ்டாராக இருந்தாலும் இதுதான் நடைமுறை. இதுதான் சரியானது.

பிசிசிஐ என்ன செய்ய வேண்டும். விராட் கோலியை அழைத்து, ‘நீங்கள் விளையாடும் கடைசி டி20 உலகக் கோப்பை இது. இதன் பிறகு டி20 போட்டிகளில் நீங்கள் இந்தியாவுக்கு ஆட முடியாது' என்று கூறிவிட்டால், அவரே அறிவித்து விடப்போகிறார். இதுதான் நேர்ப்போக்கு. இதைவிடுத்து வதந்தியை கசியவிடுவது. அது எதிர்மறையாகப் போனால், அது வதந்தி நாங்கள் சொல்லவில்லை என்று பம்முவது, எதிர்ப்பு வராமல் பிசுபிசுத்தால் கோலியை அணியை விட்டுத் தூக்கும் மிகத்தீவிர முடிவும் எதிர்வினைகளை முன் கூட்டியே நார்மலைஸ் செய்து விடுவது. இது வெளிப்படைத்தன்மையல்ல. இதன் பெயர் தந்திரம்.

இந்நிலையில் 1983 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த கீர்த்தி ஆசாத் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் தொடுத்த கடும் சாடலில், "முதலில் ஜெய் ஷா அணித்தேர்வாளர் கிடையாது. அப்படியே இருந்தாலும் அவர் தலைமை தேர்வாளர் அஜித் அகார்க்கரை அழைத்து இது குறித்து முறையாக விவாதித்து அகர்கர் பிற தேர்வாளர்களிடம் பேசி முடிவெடுக்குமாறு அறிவுறுத்தலாம்,

இதற்கு மார்ச் 15ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இது குறித்து உள் ஆதாரங்களை நம்பினால் அஜித் அகர்க்கரால் இது குறித்து தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை என்பதும், பிற தேர்வாளர்களை அவரால் இது தொடர்பாக திருப்திப்படுத்த முடியவில்லை என்றுமே தெரிகிறது.

ஜெய் ஷா கேப்டன் ரோஹித் சர்மாவையும் கேட்டுள்ளார். அவரும் ‘கோலி நிச்சயம் அணியில் வேண்டும்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்ததாகத் தெரிகிறது. விராட் கோலி டி20 உலகக் கோப்பையில் ஆடுவார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அணித் தேர்வுக்கு முன்பாக தெரிவிக்கப்படும். அணித் தேர்வு நிகழ்முறைகளில் முட்டாள்கள் தங்களைத் தாங்களே ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது" என்று கடுமையாக சாடியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x