Published : 10 Mar 2024 06:35 AM
Last Updated : 10 Mar 2024 06:35 AM

டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4-1 என வென்றது இந்தியா: ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ், தொடர் நாயகன் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

தரம்சாலா: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தரம்சாலாவில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 2-வது நாள்ஆட்டத்தின் முடிவில் 120 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 473 ரன்கள் குவித்தது. ஷுப்மன் கில் 110,ரோஹித் சர்மா 103, தேவ்தத் படிக்கல் 65, சர்பராஸ் கான் 56 ரன்கள் சேர்த்தனர். குல்தீப் 27, ஜஸ்பிரீத் பும்ரா 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 124.1 ஓவர்களில் 477 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

குல்தீப் யாதவ் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ்ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். ஜஸ்பிரீத் பும்ரா 20 ரன்கள் சேர்த்த நிலையில் ஷோயிப் பஷிர்பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். இங்கிலாந்து அணி தரப்பில் ஷோயிப் பஷிர் 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 259 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 48.1 ஓவரில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸாக் கிராவ்லி (0), பென் டக்கெட் (2), ஆலி போப் (19), பென் ஸ்டோக்ஸ் (2), பென் ஃபோக்ஸ் (8) ஆகியோர் அஸ்வின் பந்தில் நடையை கட்டினர்.

ஜானி பேர்ஸ்டோ 39 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஜஸ்பிரீத் பும்ரா தனது ஒரே ஓவரில் டாம் ஹார்ட்லி (20), மார்க் வுட் (0) ஆகியோரை வெளியேற்றினார். ஷோயிப் பஷிர் 13 ரன்களில் ஜடேஜா பந்தில் போல்டானார். ஜோ ரூட் 128 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி வீரராக குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தினார். ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை4-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. இரு இன்னிங்ஸையும் சேர்த்து கூட்டாக 7 விக்கெட்களையும் பேட்டிங்கில் 30 ரன்களையும் சேர்த்த குல்தீப் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்வானார். தொடர் நாயகனாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார். அவர், இந்த தொடரில் இரண்டு இரட்டை சதங்களுடன் 712 ரன்கள் குவித்திருந்தார்.

ஆண்டர்சன் 700: தரம்சாலா டெஸ்ட் போட்டியில் நேற்று குல்தீப் யாதவை 30 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் கைப்பற்றிய 700-வது விக்கெட் இதுவாகும். இதன் மூலம் 700 விக்கெட்களை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஆண்டர்சன். அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இலங்கையின் முத்தையா முரளிதரன் (800) முதலிடத்தில் உள்ளார். மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் (708) 2-வது இடம் வகிக்கிறார்.

தொடக்கமும்.. 100-வது போட்டியும்: அறிமுக டெஸ்ட் போட்டியிலும் 100-வது டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின். கடந்த 2011-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் அறிமுக வீரராக 6 விக்கெட்களை வீழ்த்திய அவர், தற்போது தனது 100-வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்களை சாய்த்துள்ளார்.

36-வது முறையாக 5 விக்கெட்கள்: தரம்சாலா டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் அஸ்வின் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர், 5 விக்கெட்கள் வீழ்த்துவது இது 36-வது முறையாகும். இதன் மூலம் இந்த வகை சாதனையில் 3-வது இடத்தை நியூஸிலாந்தின் ரிச்சர்ட்டு ஹெட்லியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் அஸ்வின். அதேவேளையில் இந்திய வீரர்களில் அதிக முறை 5 விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் அனில் கும்ப்ளே 35 முறை 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். முதலிடத்தில் இலங்கையின் முத்தையா முரளிதரன் (67 முறை), 2-வது இடத்தில் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் (37 முறை) உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x