Published : 26 Feb 2024 05:00 PM
Last Updated : 26 Feb 2024 05:00 PM

“எங்களை விட இந்திய வீரர்கள் திறமையுடன் விளையாடினர்” - பென் ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதன் முதலாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. ராஞ்சி டெஸ்ட் போட்டியில் வெற்றி இலக்கான 192 ரன்களை அபாயகரமான பிட்சில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தொடரை 3-1 என்று இந்தியா வென்றது. ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் புதிய வீரர்கள் அபாரமாக ஆடினர்.

இந்த டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப், விக்கெட் கீப்பர் ஜுரெல். இரண்டாவது இன்னிங்சிலும் ஜுரெல் அற்புதமான தடுப்பாட்டத்தை பயன்படுத்தி 77 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ரன்களை எடுக்க ஷுப்மன் கில் 52 ரன்கள் என்று ஒரு முக்கியமான இன்னிங்ஸை ஆடி வெற்றி பெற்றுக் கொடுத்தார். இருவரும் சேர்ந்து 72 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்து வெற்றி தேடித் தந்தனர்.

பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, பிட்சை, ‘பேட் செய்ய சாத்தியமில்லாதது’ என்பது போல் வர்ணித்தார். ஆனால் இதே பிட்சில்தான் துருவ் ஜுரெல், குல்தீப் யாதவ் அருமையான கூட்டணி அமைத்தனர். ஜெய்ஸ்வால் அருமையாக ஆடினார். பந்து வீச்சில் இந்திய ஸ்பின்னர்கள் நிச்சயம் இங்கிலாந்தின் அனுபவமற்ற ஸ்பின்னர்களை விட ஒரு படிமேல் என்று வீசினர். ஆனால் இங்கிலாந்து வெற்றி வாய்ப்பைத் தவற விட்டு விட்டது என்றுதான் கூற வேண்டும். பிட்சைப் பார்த்துப் பார்த்து பந்தைப் பார்த்து, பந்துக்கு ஆடாமல் கோட்டை விட்டனர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த ஆட்டத்திறன் பற்றி பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது: “சில நேரங்களில், குறிப்பிட்ட தருணங்களில் எங்கள் கை ஓங்கியிருந்தது. அந்தத் தருணங்களில் சிறப்பாக ஆடினோம். இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் பிட்ச் பேட்டிங் செய்ய சாத்தியமற்று இருந்தது என்று நான் கூற வர மாட்டேன். என்னைப் பொறுத்தவரை சாத்தியமில்லாதது எதுவும் இல்லை. ஆனால் நேற்று மிகமிகக் கடினமாக இருந்தது என்றுதான் கூற வேண்டும். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் வீசும் போது இது போன்ற பிட்ச் நிலைமைகள் மிக மிகக் கடினம் என்றுதான் கூறுவேன்.

ஆட்டத்தை எதிரணியிடமிருந்து எவ்வளவு தூரம் பிடுங்கிச் செல்ல வேண்டுமோ அவ்வளவு தூரம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் போதெல்லாம் ஸ்கோர் செய்வது இந்தப் பிட்சில் மிக மிகக் கடினமாக இருந்தது. பிட்ச் கொஞ்சமாவது நன்றாகி விடும் என்று நாங்கள் கருதவில்லை.

இன்றும் அதைப் பார்த்தோம். நான் இப்படித்தான் நினைக்கிறேன், அதாவது இந்திய ஸ்பின்னர்கள் நேற்று வீசியது எங்களுக்கு பேட்டிங்கை நம்ப முடியாத அளவுக்கு மிக மிகக் கடினமாக்கியது. ஸ்ட்ரைக்கை ரொடேட் கூட செய்ய முடியவில்லை.கிரிக்கெட் ஆட்டம் என்பது திறமைகளுக்கு இடையிலான சவால் ஆகும். அப்படி திறமை அளவில் பார்த்தால் இந்திய அணி வீரர்களின் திறமை எங்களை விட சிறப்பாக இருந்தது என்றுதான் கூற வேண்டும்.

இது ஒரு அருமையான டெஸ்ட் போட்டி. இந்தியா 5 விக்கெட்டுகளில் வென்றுள்ளனர். ஸ்கோர்போர்டை வைத்துப் பார்க்கும் போது ஒன்றும் தெரியாது. ஆனால் உண்மையில் கிரிக்கெட் ஆட்டத்தின் பெருமை ஸ்கோர்போர்டைப் பார்த்தால் தெரியாது. இந்த டெஸ்ட் அவ்வளவு சவாலான டெஸ்ட்டாக இருந்தது. ஆட்டத்தின் போக்கில் உயர்ச்சியும் தாழ்ச்சியும் மாறி மாறி வந்தன.

எங்கள் ஸ்பின்னர்களுக்குரிய பெருமையை நான் சேர்த்தேயாக வேண்டும். டாம் ஹார்ட்லியும் ஷோயப் பஷீரும் அருமையாக வீசினர். இன்றைய போன்ற சூழலுக்கு அவர்கள் அனுபவத்தில் ஆரம்பத்திலேயே தள்ளப்பட்டது கடினமே. ஆனால் இவர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தியாவில் நாங்கள் ஆடிய விதம் குறித்தும் அணி குறித்தும் மிகவும் பெருமைப் படுகிறேன்.

இதுவரை இந்தத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து அணிகளில் புதிய திறமைகள் பிரமாதமாக சோபித்துள்ளனர். நான் கிரிக்கெட்டின் மிகப் பெரிய விசிறி, அதுவும் டெஸ்ட் கிரிக்கெட் தான் எனக்கு மிக மிக பிடித்த வடிவம். இரு அணிகளிலும் இளம் வீரர்கள் வந்து தங்கள் ஆட்டத்தை வெளிப்படுத்திய விதம் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஆயுள் வலுவாக இருப்பதையே உணர்த்துகிறது.

இங்கிலாந்தைப் பொறுத்தவரையிலும் என்னைப் பொறுத்தவரையிலும் வெற்றி தோல்வி பிரச்சினையல்ல, அணிக்காக நாம் என்ன கொடுக்கிறோம், உள்ளிடுகிறோம் என்பதுதான் முக்கியம். முடிவுகள் தானாக மலரும். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் இங்கு திறமைகளை வெளிப்படுத்த அழைப்பு விடுக்கிறது. நாங்களும் எங்கள் பங்களிப்புகளைக் கொடுத்தோம் இதைத்தான் வீரர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்” என்றார் பென் ஸ்டோக்ஸ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x