Published : 19 Feb 2024 10:05 AM
Last Updated : 19 Feb 2024 10:05 AM

இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு தேர்வான திருவாரூர் விவசாயி மகள்

காவியா

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மகள், இந்திய மகளிர் கால்பந்தாட்ட அணியில் விளையாட தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பக்கிரிசாமி. இவரது மனைவி செல்வமேரி, மகள் காவியா ( 20 ). கால்பந்து வீராங்கனையான காவியா, இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, பிப்.21 முதல் பிப்.27 வரை துருக்கியில் நடைபெற உள்ள சர்வதேச கால் பந்து போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

இது குறித்து காவியாவின் பயிற்சியாளர் மார்க்ஸ் கூறியது: சவளக்காரன் ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்ற காவியா, பள்ளி கால்பந்து அணியில் இடம் பெற்றார். பள்ளிப் படிப்பு முடிந்து அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயிலும் போது, பல்கலைக்கழக கால்பந்து அணியிலும், தொடர்ந்து, தனது திறமையால் பெங்களூரு தனியார் கிளப் அணியிலும் இணைந்து விளையாடினார்.

இந்திய மகளிர் கால்பந்து அணியில் இடம் பெறுவதற்கான தேர்வு முகாமில் பங்கேற்று விளையாடிய போது, தனது அசாத்திய திறமையை வெளிப் படுத்தி அணியில் இடம் பிடித்துள்ளார். சர்வதேச அளவிலான மகளிர் கால்பந்து போட்டியில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பங்கேற்கும் முதல் வீராங்கனை என்ற சிறப்பை காவியா பெற்றுள்ளார் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x