Last Updated : 07 Feb, 2018 12:48 PM

 

Published : 07 Feb 2018 12:48 PM
Last Updated : 07 Feb 2018 12:48 PM

எங்களுக்கு எதிராக கோலியால் சதம் அடிக்க முடியுமா?- பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் சவால்

 இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அனைத்து அணிகளுக்கும் எதிராக சதம் அடித்து இருக்கலாம், ஆனால், இப்போது இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடிக்க முடியாது என்று பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் சவால் விடுத்துள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மனும், கேப்டனுமான விராட் கோலி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, தனது 33-வது சதத்தைப் பதிவு செய்தார்.

இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும், ஐசிசியின் முழு உறுப்பினர்களான 9 அணிகளுக்கு எதிராகவும் சதம் அடித்துள்ளார் என்ற பெருமையையும் கோலி பெற்றார்.

அதுமட்டுமல்லாமல் டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 போட்டி என 3 விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்ற பெருமையும் கோலிக்கு உண்டு. கிரிக்கெட்டில் பெருமைக்குரிய விருதான சர் கார்பீல்ட் சோபர்ஸ் கோப்பையை இதுவரை சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், அஸ்வின் ஆகியோர் வென்றுள்ள நிலையில், 4-வது இந்தியராக கோலியும் வெல்ல உள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான பேட்டிங் செய்து இருந்தாலும், சாம்பியன்ஸ் கோப்பைக்கு பின் இன்னும் இந்திய அணி அந்த அணியுடன் விளையாடியதில்லை. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான மிக்கி ஆர்தர் , விராட் கோலிக்கு சவால் விடுத்துள்ளார்.

அவரின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகச் சிறந்த வீரர், பேட்ஸ்மன் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அனைத்து அணிகளுக்கு எதிராகவும் அவர் சதம் அடித்து இருக்கிறேன் என்று பெருமை கொள்ளலாம். ஆனால், இப்போது இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவரால் சதம் அடித்துவிட முடியாது. எங்கள் அணிக்கு எதிராக கோலியால் சதம் அடிப்பது என்பது மிக மிகக் கடினமாகும்.

அப்படி எங்களுடைய அணிக்கு எதிராகவும் கோலி சதம் அடித்து, விளையாடினால், அனைத்து அணிகளுக்கும் எதிராக சதம் அடித்த அவரின் சாதனையை நினைத்து அவரின் ஆட்டத்தை ரசிக்கலாம். ஆனால், எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் கோலியை அவ்வளவு எளிதாக சதம் அடிக்க விட்டுவிடமாட்டார்கள்.''

இவ்வாறு மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

மிக்கி ஆர்தரின் இந்த சவால் விடும் பேச்சு சர்வதேச கிரிக்கெட் நோக்கர்களுக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2005-06 ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தான் சென்று ஒருநாள் தொடரில் பங்கேற்று 4-1 என்ற கணக்கில் வென்றது. அந்த தொடரில் ராகுல் டிராவிட்தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின் இரு அணிகளும் சுற்றுப்பயணம் செய்து விளையாட முடியவில்லை.

மேலும், இந்தியா, பாகிஸ்தான் அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினைகள், எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறல்கள் போன்றவற்றால், இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடத்துவது என்பது இயலாததாகி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x