Last Updated : 02 Feb, 2018 09:25 AM

 

Published : 02 Feb 2018 09:25 AM
Last Updated : 02 Feb 2018 09:25 AM

இந்திய ஓபன் பாட்மிண்டன் தொடர் கால் இறுதிக்கு முன்னேறினர் காஷ்யப், சமீர் வர்மா: மகளிர் பிரிவில் கரோலினா மரின் அசத்தல்

இந்திய ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காஷ்யப், சமீர் வர்மா ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினார்கள்.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 55-ம் நிலை வீரரான இந்தியாவின் காஷ்யப் 21-19, 19-21, 21-12 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த 167-ம் நிலை வீரரான ஜெய்ஸ்வாலை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 59 நிமிடங்கள் நடைபெற்றது. மற்றொரு ஆட்டத்தில் 30-ம் நிலை வீரரான இந்தியாவின் சமீர் வர்மா ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் போராடி 29-ம் நிலை வீரரான இந்தோனேஷியாவின் டாமி சுகிர்தோவை 21-18, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதியில் கால்பதித்தார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ், அஸ்வினி பொன்னப்பா ஜோடி 21-16, 15-21, 23-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் டான் கியான் மெங், லாய் பெய் ஜிங் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது. இதேபோல் பிரணவ் ஜெர்ரி சோப்ரா, ஷிக்கி ரெட்டி ஜோடி 21-10, 21-19 என்ற நேர் செட்டில் மலேசியாவின் யோகேந்திரன் கிருஷ்ணன், இந்தியாவின் பிரஜக்தா சாவந்த் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 21-11, 21-15 என்ற நேர் செட்டில் சகநாட்டைச் சேர்ந்த துஷார் சர்மா, சந்திரபூஷன் திரிபாதி ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது. மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரின் 15-21, 21-15, 21-11 என்ற செட் கணக்கில் 50-ம் நிலை வீராங்கனையான சீனாவின் கவோ ஃபாஞ்சியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x