Published : 06 Feb 2024 01:05 PM
Last Updated : 06 Feb 2024 01:05 PM

டிஆர்எஸ் தீர்ப்புகள்: பென் ஸ்டோக்ஸ் சந்தேகம்!

கிரிக்கெட்டில் தொழில் நுட்பம் புகுத்தப்பட்டு எல்.பி.தீர்ப்புகள், மட்டையில் லேசாகப் படும் தீர்ப்புகள் பெரிய அளவில் சர்ச்சைகளை வர வர கிளப்பி வருகின்றன, தொழில் நுட்பக் கோளாறுகளைப் போதாமைகளை எந்த கேப்டனாவது சுட்டிக்காட்டினால் உடனே தோல்வியைக் கண்டு அழுகிறார், புலம்புகிறார் என்று நெட்டிசன்கள் முதல் விவரம் தெரிந்த வர்ணனையாளர்கள் வரை சமூக ஊடகங்களில் சாடக்கிளம்பி விடுகின்றனர்.

உண்மையில் தோனி தொழில்நுட்பத்தை நம்ப மாட்டார், ஏனெனில் அவர் கூற வருவது என்னவெனில் தொழில்நுட்பம் துல்லியத்தைத் தருகிறது என்றால் ‘அம்பயர்ஸ் கால்’ என்ற ஒன்று இருக்க வேண்டிய அவசியமென்ன? அவுட்டா நாட் அவுட்டா அவ்வளவுதானே என்பார் தோனி. மிகச்சரியான தகர்ப்பு விமர்சனக் கேள்வியாகும் இது.

இப்போது பென் ஸ்டோக்ஸ் அதே கேள்வியை எழுப்பியுள்ளார். விசாகப்பட்டண டெஸ்ட் போட்டியில் ஜாக் கிராலிக்கு கொடுத்த அவுட் உண்மையில் அநியாயமான அவுட். எப்படி அதை அவுட் கொடுக்க முடியும் என்றே இப்போது வரை உண்மையான நடுவர்களுக்கே குழப்பமாக உள்ளது. பென் ஸ்டோக்ஸ் தோற்றதற்கு அதைக் காரணமாகக் கூறவில்லை. அப்படி அவர் கூறுவதைக் குறுக்கிப் புரிந்து கொண்டு அவரை நெட்டிசன்கள் ஒன்றும் தெரியாமல் சாடி வருகின்றனர். கிரிக்கெட்டை கிரிக்கெட்டாகப் பார்க்க வேண்டும். அதில் தொழில் நுட்பம் ஆற்றும் பங்கில் குறையிருந்தால், அது சுட்டிக்காட்டப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளும் பரந்த மனப்பான்மை வேண்டும், இதே ரோஹித் சர்மா சொன்னால் ஆஹா, பிரமாதம் என்றும் எதிரணி கேப்டன் சொன்னால் அதை உடனே அழுகை என்றும் புலம்பல் என்றும் தோல்விக்கான சாக்கு என்றும் சாடுவது கும்பல் மனோபாவமே.

இங்கிலாந்து எல்லா பிட்ச்களுக்கும் ஒரே பாஸ்பால் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது படுமோசமான சிந்தனை. உண்மையான பிட்சில் பாஸ்பால் கைக்கொடுக்கும் பந்து மேலேயும் கணுக்காலுக்குக் கீழேயும் மாறி மாறி செல்லும் பிட்ச்களில் பொறுமையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும், கிராலி, பென் ஃபோக்ஸ், ஏன் அறிமுக வீரர் ஹார்ட்லி ஆடும் உத்தி கூட ஜோ ரூட்டிடமோ, ஆலி போப்பிடமோ, பேர்ஸ்டோவிடமோ இல்லை என்பதுதான் தோல்விக்குக் காரணம்.

பென் ஸ்டோக்ஸும் இதை ஒப்புக் கொண்ட நிலையில்தான் தொழில்நுட்பக் கோளாறுகளை விமர்சிக்கிறார்:

“ஆட்டத்தில் தொழில்நுட்பம் இருக்கவே செய்யும். அது 100% முடிவுகளைத் துல்லியமாக கொடுக்காததன் காரணங்கள் அனைவரும் அறிந்ததே. அதனால்தான் அம்பயர்ஸ் கால் என்ற ஒன்று இருக்கிறது. 100% அது துல்லியமில்லை என்பதை ஒத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் நான் தொழில்நுட்பத்தில் பிரச்சனை இருக்கிறது என்று கூறினால் அதையும் ஏற்கத்தான் வேண்டும். கிராலி விஷயத்தில் தொழில்நுட்பம் தவறானதே, அதுதான் என் கருத்து. அது என் சொந்தக் கருத்து.

ஆனால் பலதரப்பட்ட ஐயங்களும் நிர்ணயமின்மைகளும் உள்ள போட்டியில் நாங்கள் விரும்பிய முடிவு கிடைக்காதது தொழில் நுட்பத்தினால் என்று நான் ஒருபோதும் கூறப்போவதில்லை. கிராலி அவுட்டில் தொழில் நுட்பம் தவறான முடிவைக் காட்டியது என்று என் சொந்தக் கருத்தைச் சொல்ல எனக்கு தார்மிக உரிமை உண்டு. அதற்காகப் புகார் எழுப்பவெல்லாம் போவதில்லை. நடந்து முடிந்த ஒன்றை மேலும் கொண்டு செல்வதில் என்ன பயன்? அந்தத் தீர்ப்பை மாற்றி அமைக்க முடியுமா என்ன? ஆகவே அந்த இடத்துடன் என் கருத்து முடிந்து விட்டது” என்றார் பென் ஸ்டோக்ஸ்.

ஜாக் கிராலி அட்டகாசமாக ஆடி வந்தார். அவர் இருந்திருந்தால் இலக்கை நோக்கி இங்கிலாந்து திட்டமிட்டு சென்றிருக்கும். 42வது ஓவரில் குல்தீப் யாதவ் பந்தில் கால்காப்பில் வாங்கினார். அதை கள நடுவர் மரைஸ் எராஸ்மஸ் நாட் அவுட் என்றார். ரோஹித் சர்மா ரிவியூ கேட்டார். பந்து கால்காப்பில் பட்டு ஸ்டம்பில் அடிக்குமாறு காட்டியது டி.ஆர்.எஸ். அவுட் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இது கடும் சந்தேகங்களை எழுப்பியது. ஏனெனில் பந்து பிட்ச் ஆன பகுதியும் கால்காப்பில் பட்ட பகுதியும் பந்து ஸ்டம்பை அடிக்குமாறு இருந்திருக்க வாய்ப்பில்லை, டி.ஆர்.எஸ். எப்படி அப்படிக் காட்டியது என்பதுதான் பென் ஸ்டோக்சின் சந்தேகம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x