Published : 28 Jan 2024 10:19 PM
Last Updated : 28 Jan 2024 10:19 PM

AUS vs WI | “நாங்கள் அப்படி அல்ல என்பதை காட்ட விரும்பினோம்” - ஹாக் பேச்சு குறித்து பிராத்வெயிட்

பிரிஸ்பன்: ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தங்களுக்கு உத்வேகம் கொடுத்தது முன்னாள் ஆஸி. வீரர் ரோட்னி ஹாக், தங்கள் அணி குறித்து பேசிய விதம் தான் என மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் தெரிவித்துள்ளார்.

மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடின. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. கடந்த 25-ம் தேதி தொடங்கிய 2-வது போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அந்த அணியின் கேப்டன் கம்மின்ஸ், 64 (நாட்-அவுட்) ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்யப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி விரட்டியது.

ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 19 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 33, கேமரூன் கிரீன் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 156 ரன்கள் தேவை என்ற நிலையில் 4-வது நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியது.

கிரீன், ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, ஸ்டார்க், கம்மின்ஸ், லயன், ஹேசில்வுட் ஆகியோர் ஆட்டமிழந்தனர். 50.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸி. மறுமுனையில் 146 பந்துகளில் 91 ரன்களை எடுத்திருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் வீரர் ஷமர் ஜோசப் 7 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். அசுர வேகத்திலான அவரது பந்து வீச்சு உலக டெஸ்ட் சாம்பியனான ஆஸி. யை ஆட்டம் காண செய்தது. முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட்டை அவர் கைப்பற்றி இருந்தார். தொடரில் 13 விக்கெட்களை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார். 2-வது போட்டியின் ஆட்ட நாயகனும் அவர் தான். இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது. சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில், டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றுள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.

“பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட நான் விரும்புவேன். ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் வென்றது சிறப்பானது. நாங்கள் இங்கு வெற்றி பெற்று பல ஆண்டுகள் ஆகிறது. இந்த வெற்றி தொடக்கம் மட்டும்தான். இதை தொடரவே விரும்புகிறோம். எங்களுக்கு இந்த டெஸ்ட் போட்டியில் உத்வேகம் தந்தது முன்னாள் ஆஸி. வீரர் ரோட்னி ஹாக் பேசிய விதம்தான். எங்களைப் பார்த்தால் பரிதாபமாகவும், நம்பிக்கை அற்றவர்களாகவும் இருப்பதாக அவர் சொன்னார். இந்த உலகத்துக்கு நாங்கள் அப்படி அல்ல என்பதை வெளிக்காட்ட விரும்பினோம். இந்த வலு போதுமா (கைகளை மடக்கி பைசெப்ஸ் காட்டுகிறார்) என அவரிடம் கேட்க விரும்புகிறேன்.

ஷமர் ஜோசப் சிறப்பாக செயல்பட்டார். அவர் சூப்பர்ஸ்டார். எங்கள் அணிக்காக மகத்தான சாதனைகளை வரும் நாட்களில் படைக்க உள்ளார். வெற்றி பெறும் வரை பந்து வீசுவதை நிறுத்த மாட்டேன் என என்னிடம் சொன்னார். அது தான் அவரது நம்பிக்கை. முதல் போட்டியில் தோல்வி பெற்ற நிலையில் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதை எங்களுக்கான கற்றல் பயிற்சியாக எடுத்துக் கொள்வோம்” என வெற்றிக்கு பிறகு மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் கிரெய்க் பிராத்வெயிட் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x