Published : 23 Jan 2024 04:15 PM
Last Updated : 23 Jan 2024 04:15 PM

“முதல் பந்தில் இருந்தே சுழலுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தால்...” - இந்திய அணிக்கு வாகன் அலர்ட்

கோப்புப்படம்

மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி வரும் வியாழக்கிழமை தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்திய அணிக்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணி வீரர்களும் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தத் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளது. இங்கிலாந்து அணியின் பாஸ்பால் அணுகுமுறை இந்தத் தொடரில் எந்த அளவுக்கு உதவும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் இந்திய ஆடுகள தயாரிப்பு சார்ந்து தனது கருத்தை மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

“முதல் பந்தில் இருந்தே சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தை இந்தியா அமைக்க கூடாது. அப்படி செய்தால் அது பெரிய தவறாக அமையும். அதனை இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் நிலை உள்ளது. அதேபோல இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் பேட் செய்யவில்லை என்றாலும் விரைந்து ரன் சேர்க்கவே முயற்சிப்பார்கள்.

ஜடேஜாவை விட ஜாக் லீச் சிறந்த சுழற்பந்து வீச்சாளரா என்ற கேள்வி எழலாம். ஆனால், இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தால் அடுத்த இன்னிங்ஸில் அவர் சிறப்பாக செயல்படலாம். அதனால் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இந்தியாவுக்கு அச்சுறுத்தல். ஃப்ளாட் பிட்ச்களில் இந்தியா ரன்கள் குவிக்கலாம். இங்கிலாந்து வீரர்களை அவுட் செய்ய அந்த அணியின் பவுலர்கள் முயற்சிக்கலாம்” என வாகன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்கவே இல்லை. அதற்குள் ஆடுகளம் குறித்து வாகன் இப்படி பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x