Published : 21 Jan 2024 12:06 AM
Last Updated : 21 Jan 2024 12:06 AM

சோயிப் மாலிக்கை விவாகரத்து செய்தாரா சானியா மிர்சா... - தந்தை குறிப்பிட்ட 'குலா' என்றால் என்ன?

மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் ஆல் ரவுண்டரான சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேதை திருமணம் செய்து கொண்டதாக இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளார். முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டரான சோயிப் மாலிக், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சனாவுடனான திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதேபோல் சனா ஜாவேதும் தனது சமூக வலைதளத்தில் இந்தத் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இத்திருமண அறிவிப்பு மூலமாக சானியா மிர்சா, சோயிப் மாலிக் இருவரும் பிரிந்து விட்டதாகக் கூறப்பட்ட செய்தி உறுதியாகி இருக்கிறது.

முன்னதாக சோயிப் மாலிக்கும் சானியா மிர்சாவும் முறையாக எந்த நீதிமன்றங்களையும் விவாகரத்து கோரி அணுகியதாகவோ, நீதிமன்றங்கள் மூலம் விவாகரத்து பெற்றதாகவோ செய்திகள், தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இத்தனைக்கும் இருவரும் பிரிந்து வாழ்வதை சமூக வலைத்தளங்கள் மூலம் உறுதிசெய்த பின்னும் விவாகரத்து குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. அவ்வாறு இருக்கையில் சனா ஜாவேதை எப்படி சோயிப் மாலிக் திருமணம் செய்து கொண்டார் என்பது கேள்வியாக இருந்தது. இந்த கேள்விக்கு சானியா மிர்சாவின் தந்தை பதில் கொடுத்துள்ளார்.

சோயிப் மாலிக், சானியா மிர்சா விவாகரத்து தொடர்பாக ஊடகங்களிடம் பேசியுள்ள சானியாவின் தந்தை இம்ரான் மிர்சா "இது ஒரு குலா'' என்று கூறினார். குலா என்றால் இஸ்லாத்தில் ஒரு முஸ்லீம் பெண் தனது கணவரை ஒருதலைப்பட்சமாக விவாகரத்து செய்யும் உரிமையைக் குறிக்கிறது. எளிமையாக சொல்வதென்றால், முஸ்லீம் ஆண்கள் தலாக் அல்லது முத்தலாக் கூறி விவாகரத்து செய்வது போல், முஸ்லீம் பெண்கள் குலா என்று கூறி விவாகரத்து செய்ய முடியும். அதன்படியே, சானியா மிர்சா தனது கணவர் சோயிப் மாலிக்கை பிரிந்தார் என்பதை அவரின் தந்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

பின்னணி: சானியா மிர்சா - சோயிப் மாலிக் திருமணம் கடந்த 2010-ம் ஆண்டு இஸ்லாமிய மதப்படி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் சியால்கோட்டில் வரவேற்பு நடந்தது. இந்த இணையருக்கு 2018-ம் ஆண்டு இஷான் மிர்சா மாலிக் என்ற குழந்தை பிறந்தது. திருமணத்தில் இருந்து தம்பதிகள் துபாயில் வசித்து வந்தனர்.

விளையாட்டு நட்சத்திர தம்பதிகள் பிரிந்து விட்டனர் என்ற வதந்திகள், சானியா- சோயிப் இருவரும் தங்களது மகனின் பிறந்த நாளை கடந்த ஆண்டு ஒன்றாக இணைந்து கொண்டாடிய போது சற்றே ஓய்ந்திருந்தது. பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் தம்பதியர் இருவரும் தங்களின் சமூகவலைதள ‘பயோ’வில் செய்த மாற்றங்களால் மீண்டும் பரவத் தொடங்கியது. சோயிப் மாலிக் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பயோவை சூப்பர் உமன் சானியா மிர்சாவின் கணவன் என்பதில் இருந்து உண்மையாக ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை என மாற்றியிருந்தார். அதேபோல் சானியா மிர்சா, சோயிப் மாலிக் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தின் ப்ரோஃபைல் படத்தில் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை நீக்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x