Published : 20 Jan 2024 03:25 PM
Last Updated : 20 Jan 2024 03:25 PM

“ஜடேஜா ஒன்றும் முரளிதரனோ, ஷேன் வார்னோ அல்ல!” - உத்தியுடன் ஆட இங்கிலாந்துக்கு பீட்டர்சன் அறிவுரை

இங்கிலாந்து அணி இந்தியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விரைவில் விளையாடவுள்ளது. ஏற்கெனவே, துணைக்கண்டத்தில் பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து தன் பாஸ்பால் அதிரடி அணுகுமுறையில் உள்ளூர் அணிக்கு ஒயிட்வாஷ் கொடுத்தது நினைவிருக்கலாம். இந்த முறை இந்திய ஆடுகளங்களின் தாதாக்களாகிய அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேலைச் சமாளிப்பதற்கும் பாஸ்பால் உதவுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில், கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். பீட்டர்சன் இந்திய பிட்ச்கள் குறித்து அறிவுரை வழங்கத் தகுதியானவரே. ஏனெனில், கடந்த 2012 தொடரில் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்து சாய்த்து தொடரை வென்ற போது பேட்டிங்கில் செம காட்டு காட்டியவர் பீட்டர்சன். அதுவும் குறிப்பாக மும்பை ஸ்பின் பிட்சில் பீட்டர்சன் எடுத்த 186 ரன்கள், விவ் ரிச்சர்ட்ஸின் 198 ரன்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளதாகும்.

கடைசியாக இங்கிலாந்து இந்தியாவில் டெஸ்ட் தொடரை வென்றதும் 2012-ல் தான். அப்போது மான்டி பனேசர், ஸ்வான் என இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய ஸ்பின் பிட்சில் இந்திய அணியைக் காலி செய்தனர். குழிப்பிட்ச் இவர்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளது.

இந்த முறையும் குழிப்பிட்ச்தான் இங்கிலாந்துக்குத் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கெவின் பீட்டர்சன், டைம்ஸ் ஊடகத்திற்காக முன்னாள் வீரர் மைக் ஆத்தர்டனிடம் உரையாடிய போது சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் என்று ஸ்பின் படை உள்ளது. எப்படியும் 2-வது பந்தே தூசித் தும்பட்டைப் பறக்கும் பிட்ச்தான் இருக்கும். கெவின் பீட்டர்சன் 2012 தொடரில் மும்பையில் அடித்த 186 ரன்கள் இன்னிங்சில் அஸ்வினைத் திறம்படக் கையாண்டார். அது பற்றி அவர் இந்த உரையாடலில் கூறும்போது, “அஸ்வினின் ‘தூஸ்ரா’ பந்தை நான் சரியாகக் கணித்தேன். அவர் பந்தை மறைத்துக் கொண்டு தூஸ்ராவை வீசுவார், இப்போதும் அப்படித்தான் அவர் செய்கிறார் என்று நினைக்கிறேன். ஒரு ஆஃப் ஸ்பின்னராக பந்தை விரல்களில் தாங்கியபடி வந்து கடைசி நேரத்தில் தூஸ்ராவுக்காக பந்தை மாற்றுபவர் அல்ல அஸ்வின். அவர் முதலிலேயே தூஸ்ரா என்று முடிவு செய்தே வீசுகிறார்.

ஆகவே, நான் 100% உறுதியாக இருந்தேன், அது தூஸ்ராதான் என்று, எனவேதான் தொடர்ந்து அவரை ஆஃப் திசையில் என்னால் அடித்து ஆட முடிந்தது. லெக் திசையில் நெருக்கமாக ஃபீல்டர்களை அமைத்து வீசுகிறார். பந்து அதிகமாகத் திரும்பும். நான் நான்கு அல்லது ஆறு என்று முடிவெடுப்பேன்.

அதே போல் ஜடேஜாவையும் அதிகம் ஆடியிருக்கிறேன். இவையெல்லாம் நம் உத்தியைப் பொறுத்தே அமையும். உத்திதான் முக்கியம். ஜடேஜா ஒன்றும் முரளிதரனோ, ஷேன் வார்னோ அல்ல. அவர் இடது கை ஸ்பின்னர். ஒரே விதமாகவே வீசுவார். சில வேளைகளில் பந்து அவர் ஆர்மிலிருந்து சறுக்கிக் கொண்டு வேகமாக வரும். அது போன்று வரும் பந்துகளுக்காக உங்களது பேட்டிங் உத்தி சரியாக இருந்தால் போதும். நாம் அவரையும் ஆடி விடலாம்.

அதே போல் அக்சர் படேலை ஆடும்போது முன் காலை நீட்டி முன்னால் கொண்டு வராமல் பந்தின் லைனுக்கு ஏற்ப ஆடினால் பிரச்சனையில்லை. அதாவது பவுல்டு, எல்.பி.ஆகாமல் இருப்பதை உறுதி செய்து கொண்டாலே போதும். ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனால் பரவாயில்லை. ஆனால் பவுல்டு, எல்.பி ஆனால் அது பெரிய விவகாரம். பந்துக்காக காத்திருந்து ஆடவும். பந்தின் திசை மற்றும் லெந்த்தை கணக்கிட்டு அதற்குத் தகுந்தாற்போல் நகர வேண்டும்” என கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x