Published : 13 Jan 2024 01:52 PM
Last Updated : 13 Jan 2024 01:52 PM

சோதித்த ஆந்திரா... காத்திருக்கும் இங்கிலாந்து சவால் - ஸ்ரேயஸை விடாமல் துரத்தும் பவுன்சர் பலவீனம்!

ஸ்ரேயஸ் ஐயரின் பலவீனம் ஷார்ட் பிட்ச் மற்றும் பவுன்சர் பந்துகள் என்பது இப்போது ஊரறிந்த விஷயம். ஆனால் இவரது இந்தப் பலவீனம் தற்போது உள்ளூரிலும் தெரிய ஆரம்பித்து விட்டதுதான் ஸ்ரேயஸின் துரதிர்ஷ்டம். ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயஸ் ஆந்திரா பவுலர்களாலும் பவுன்சர் பந்து சோதனைக்குள்ளாக நேரிட்டது.

தென் ஆப்பிரிக்காவில் இவரை பவுன்சர் பந்துகளில் காலி செய்து அனுப்பினர். இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஸ்ரேயஸ் விடுவிக்கப்பட்டு ரஞ்சி டிராபியில் ஆட அனுப்பப்பட்டார். காரணம் இங்கிலாந்து தொடருக்கு இவர் தயாராக வேண்டுமே. இங்கிலாந்து இந்த முறை எத்தகைய குழிப்பிட்சையும் தகர்த்தெறியும் நோக்கத்தோடு கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஷார்ட் பிட்ச் பந்து உத்தியில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் பேட்டர்களையே கவிழ்த்துப் போட்டது இங்கிலாந்து. இப்போது ஸ்விங்கே ஆகாத இந்திய பிட்ச்களில் பந்துகள் தேய்ந்தவுடன் லெக் திசையில் 6 பீல்டர்களை நிறுத்தி ஷார்ட் பிட்ச் உத்தியில் இந்தியாவையும் கவிழ்க்க திட்டமிடுவார்கள் என்று நம்பலாம்.

இதனையடுத்துதான் ஸ்ரேயஸை ரஞ்சியில் ஆட இந்திய அணி நிர்வாகம் பணித்தது. நேற்று கிரீன் டாப் பிட்சில் மும்பை முதலில் பேட் செய்தது. 130/3 என்ற நிலையில் ஸ்ரேயஸ் இறங்கினார். ஷார்ட் பிட்ச், பவுன்சர் பந்துகளுக்கு எதிரான பலவீனம் கொண்ட வீரராயினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மற்ற ஃபுல் லெந்த் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி விரைவு கதியில் ரன்களைக் குவிப்பவர் என்பது உள்நாட்டு கிரிக்கெட் அணிகளுக்கு தெரிந்ததுதான். நேற்றும் இறங்கியவுடன் லெக் திசை அபார பிளிக், பின்னர் லாங் ஆன் மேல் தூக்கி அடித்து பவுண்டரி என்றுதான் தொடங்கினார்.

ஸ்ரேயஸ் ஒரு பெரிய சதத்துக்கு தயாராகி வருகிறார் என்பதை அறிந்த ஆந்திரா கேப்டன் ரிக்கி பூய் அருமையான ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு களவியூகம் அமைத்தார். முதல் இரண்டு பந்துகளை எளிதில் எதிர்கொண்ட ஸ்ரேயஸ், பிட்சின் வேகம் குறைவாக இருப்பதைக் கண்டு ஷார்ட் பிட்ச் பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டத் தொடங்கினார். உடனே ஆந்திரா கேப்டன் ரிக்கி பூய் இன்னும் ஆக்ரோஷமான பீல்ட் செட் அப் செய்தார். அதாவது லாங் லெக், டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக், டீப் பார்வர்ட் ஸ்கொயர் லெக், ஷார்ட் ஸ்கொயர் லெக், டீப் தேர்ட் மேன், டீப் பாயிண்ட் என்று ஷார்ட் பிட்ச் எகிறு பந்துகளுக்குரிய களவியூகத்தை அமைத்தார். ஆஃப் திசையில் பல இடங்கள் காலியாக இருந்த போதும் கவலையில்லாமல் ஸ்ரேயஸை எகிறு பந்துகளின் சோதனைக்கு உட்படுத்தினர்.

இந்நிலையில் ஒரு சில பந்துகளை ஆடாமல் விட்ட ஸ்ரேயஸ், கடைசியில் ஆந்திரா செட் செய்த பொறியில் சிக்கினார். ஷார்ட் பிட்ச் சோதனைக்கிடையில் நிதிஷ் குமார் ரெட்டி ஒரு வைடு பந்தை வீசினார். அதை வாரிக்கொண்டு அடிக்கப் போய் விக்கெட் கீப்பரிடம் எட்ஜ் செய்து 48 பந்துகளில் வெளியேறினார் ஸ்ரேயஸ். ஆந்திர கேப்டனின் பிளான் ஒர்க் அவுட் ஆனது. ஆந்திராவின் நேற்றைய சிறந்த பவுலர் வலது கை வேகப்பந்து வீச்சாளர் நிதிஷ் குமார் ரெட்டி. முன்னதாக மும்பை கேப்டன் அஜிங்கிய ரஹானேவை இன்ஸ்விங்கிங் யார்க்கரில் பவுல்டு செய்து டக்கில் வெளியேற்றினார். அவர் இதுவரை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஸ்ரேயஸ் ஐயருக்கு இங்கிலாந்து தொடரிலும் பவுன்சர் டெஸ்ட் நடக்கும். ஆனால் ஸ்ரேயஸின் பலம் என்னவெனில் மற்றவீரர்கள் போல் ஷார்ட் பிட்ச் எகிறு பந்துகளை எதிர்பார்த்துக் கொண்டே ஃபுல் லெந்த் பந்துகளையும் ஓவர் பிட்ச் பந்துகளையும் மட்டை போடுவது அல்ல. எகிறு பந்துகள் வரும்போது பார்த்துக் கொள்வோம், இப்போதைக்கு பந்துகள் வரும் திசைக்கும் லெந்த்தும் வினையாற்றுவோம் என்ற மனநிலை கொண்ட வீரர். ஆனால், ‘ஆந்திரா நீங்களுமா?’ என்று அவர் மைண்ட் வாய்ஸ் நேற்று கேட்டிருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x