Published : 25 Dec 2023 06:36 PM
Last Updated : 25 Dec 2023 06:36 PM

“விரைவில் உங்களுக்கு பதில் கிட்டும்” - 2024 டி20 உலகக் கோப்பை குறித்து ரோகித் சர்மா

டர்பன்: 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா. அப்போது நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடர் தோல்வி குறித்து பேசினார் அவர். அதில், "உலகக் கோப்பை இறுதிபோட்டி தோல்வி என்னையும் சக வீரர்களையும் காயப்படுத்தியது உண்மைதான். ஆனால் அதிலிருந்து மீண்டு அடுத்தடுத்த வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ரோகித் சர்மாவிடம் 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோகித், "நல்ல கிரிக்கெட் விளையாடும்போது விரக்தி எப்போதும் வரும். களத்தில் நன்றாகச் செயல்படவே அனைவரும் விரும்புகிறோம். நமக்கு கிடைக்கின்ற வாய்ப்பில் சிறப்பான செயல்பாடை வெளிப்படுத்த நினைக்கிறோம். நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். விரைவில் உங்களுக்கு பதில் கிடைக்கும்" என்று 2024-ல் நடைபெறவுள்ள டி20 தொடரில் பங்கேற்பது குறித்து பேசினார்.

2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு டி20 போட்டிகளில் பங்கேற்பதை குறைத்துக் கொண்டுள்ளார் ரோகித் சர்மா. இதனால், டி20 போட்டிகளில் அவரின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்துள்ளன. தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வருகிறார். இதனால் 2023-ன் தொடக்கத்தில் டி20 போட்டிகளில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்தி வருகிறார். சமீபத்தில் நடந்துமுடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியை ரோகித் வழிநடத்துவார் என கூறப்பட்ட நிலையிலும், அதில் அவர் பங்கேற்கவில்லை. மாறாக சூர்யகுமார் யாதவ் இந்திய அணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்தே 2024 டி20 உலகக் கோப்பையில் அவர் பங்கேற்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x