Last Updated : 27 Jan, 2018 09:46 PM

 

Published : 27 Jan 2018 09:46 PM
Last Updated : 27 Jan 2018 09:46 PM

3-வது டெஸ்ட்: ஷமி வேகத்தில் சரிந்தது தென் ஆப்பிரிக்கா; 63 ரன்களில் இந்தியா அபார வெற்றி

 

ஜோகன்ஸ்பர்க் நகரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றிக்கு முத்தாய்ப்பாக விளங்கினார். இந்த  வெற்றி மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இந்திய அணி நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேசமயம், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்கா வென்றது.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க் நகரில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்தது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 187 ரன்களும், தென் ஆப்பிரிக்க அணி 194 ரன்களும் சேர்த்தனர். 2-வது இன்னிங்சில் இந்திய 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 241 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

3-வது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் சேர்த்து இருந்ததது. அம்லா 2 ரன்களுடனும், எல்கர் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இன்றைய 4-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

ஹசிம் அம்லாவும், டீன் எல்கரும் உணவு இடைவேளை வரை தூண்போன்று நிலைத்து ஆடி விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்தனர். இதனால், ஆட்டத்தின் போக்கு தென் ஆப்பிரிக்கா பக்கம் சென்றது.

மதிய உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டத்தில் திருப்பு முனை தென்பட்டது. இசாந்த் சர்மா வீசிய 52 ஓவரில் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து 52 ரன்கள் சேர்த்திருந்த போது அம்லா ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு எல்கர், அம்லா கூட்டணி 119 ரன்கள் சேர்த்தனர்.

அம்லா விக்கெட்தான் இந்திய அணிக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதன்பின் வந்த தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வருவதும், போவதும் என பெவிலியனுக்கு சென்று வந்தனர்.

124 ரன்களுக்கு 2-வது விக்கெட்டை இழந்த தென் ஆப்பிரிக்க அணி, அடுத்த 53 ரன்களைச் சேர்ப்பதற்குள் மீதமிருந்த 8 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. எல்கர் 240 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தென் ஆப்பிரிக்க அணியில் எல்கர் 86, அம்லா 52, பிலாண்டர் 10 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர். மற்ற 8 வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.

இதில் மோர்கல், ரபாடா, குயின்டன் டீக், ஹெலுக்வாயோ ஆகிய 4 வீரர்களும் டக்அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.

இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி 12.3 ஓவர்கள் வீசி 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இசாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

ஆட்டநாயகன் விருது புவனேஷ்வர் குமாருக்கும், தொடர் நாயகன் விருது வெர்னன் பிலாண்டருக்கும் வழங்கப்பட்டது.

சுருக்கமான ஸ்கோர்:

முதல் இன்னிங்ஸ்

இந்தியா 181 மற்றும் 247

தென் ஆப்பிரிக்கா 194 மற்றும் 177(73.3)(எல்கர் 86 நாட்அவுட், முகம்மது ஷமி 5/28, இசாந்த் சர்மா 2/31, பும்ரா 2/57

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x