Published : 15 Dec 2023 06:05 PM
Last Updated : 15 Dec 2023 06:05 PM

‘எல்லா உயிர்களும் சமம்’ வாசகம்: ஐசிசி ‘தடை’யும், உறுதியான உஸ்மான் கவாஜாவின் சவாலும்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டத்தில் உஸ்மான் கவாஜா தன் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினார். பொதுவாக முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் சம்பந்தப்பட்டவர்கள், தலைவர்கள் இறந்தால் வீரர்கள் கருப்புப் பட்டை அணிவது வழக்கம். ஆனால், மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் கருப்புப் பட்டை அணியாமல் உஸ்மான் கவாஜா மட்டும் நேற்று கருப்புப் பட்டையை கையில் அணிந்திருந்தது பலருக்கும் புதிராகவே இருந்தது. அதன் காரணம் என்னவென்பது வெளியாகியுள்ளது.

ஐசிசி-யின் ஒரு முடிவை எதிர்த்தே உஸ்மான் கவாஜா நேற்று கருப்புப் பட்டையை தன் எதிர்ப்புணர்வை பதிவு செய்ய அணிந்திருந்தார். அதாவது அவரது பூட்சில் ‘எல்லா உயிர்களும் சமமே’ அதாவது 'all lives are equal' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த பூட்சை அணிய ஐசிசி தடை விதித்தது. ஐசிசியின் இந்த முடிவை எதிர்த்தே உஸ்மான் கவாஜா கருப்புப் பட்டை அணிந்து தன் மனிதார்த்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மனிதார்த்த மதிப்பீடுகளைத் தூக்கிப் பிடிக்கும் அனைத்து உயிர்களும் சமமே என்ற வாசகம் உள்ள ஷூவை அணிய ஐசிசி தடை விதித்தது ஏன் என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடம் ஒரு விமர்சனமாக எழுந்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போரில் அப்பாவி மக்களின் உயிர்கள் பலியாவதை எதிர்க்கும் வண்ணம் உஸ்மான் கவாஜா ‘ஆல் லைவ்ஸ் ஆர் ஈக்வல்’ என்ற வாசகம் பொருந்திய ஷூவை அணியத் திட்டமிட்டிருந்தார்.

ஐசிசி விதிமுறைகளின்படி அரசியல் மற்றும் மதம் சம்பந்தமான வாசகங்கள் வீரரின் சீருடையில் எங்கும் பொறிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஆனால், கவாஜா இதனை ஏற்கவில்லை. அவர் தன் சமூக ஊடகப் பதிவில் தன் எதிர்ப்பைப் பதிவு செய்யும் போது, “சுதந்திரம் மனித உரிமை மேலும் அனைத்து உரிமைகளும் சமமே. இந்த நம்பிக்கையை நான் கைவிடுவதாக இல்லை, உறுதியாக இருக்கிறேன்” என்று பதிவிட்டு ஐசிசி-க்கு சவால் விடுத்துள்ளார்.

அவரது முழு அறிக்கை வருமாறு: “நான் அதிகம் பேசப்போவதில்லை, எனக்குத் தேவையுமில்லை. ஆனால், நான் விரும்புவது என்னவென்றால், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் எப்படியாவது, இந்தக் கேள்விகளை தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்: சுதந்திரம் அனைவருக்குமானது இல்லையா? எல்லா உயிர்களும் சமம் இல்லையா?

எனக்குத் தனிப்பட்ட முறையில் நீங்கள் எந்த இனம், மதம் அல்லது கலாச்சாரம் என்பது முக்கியமில்லை. அதை நேர்மையாகச் சொல்கிறேன். எல்லா உயிர்களும் சமம் என்று நான் கூறினால் அது ஏன் பாதிக்கின்றது? என்னை அழைத்து ஏன் இது வேண்டாம் என்று சொல்ல வேண்டும்? ஏன் உங்களை இது பாதிக்கவில்லையா? என்னை விட்டு விடுங்கள் இது ஒரு பெரிய பிரச்சினை இல்லையா?

“எனது காலணியில் நான் எழுதியது அரசியல் அல்ல. நான் எந்த ஒரு பக்கத்துக்கும் சார்பாக பேசவில்லை. எனக்கு மனித வாழ்க்கை என்பது அனைவருக்கும் சமம் என்பதே. ஒரு யூத உயிர் ஒரு முஸ்லிம் உயிருக்குச் சமம், ஒரு இந்து உயிருக்குச் சமம். நான் குரலற்றவர்களுக்காகப் பேசுகிறேன். நான் சொல்லவருவது என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. ஆயிரக்கணக்கான அப்பாவிக் குழந்தைகள் பலியாகும்போது அந்த இடத்தில் என் இரண்டு பெண் குழந்தைகளை வைத்துப் பார்க்கிறேன். இது அவர்களாக இருந்தால் என்ன செய்வது என்று பார்க்கிறேன்.

ஒருவரது பிறப்பை தீர்மானிக்கும் சக்தி யாருக்கும் கிடையாது. ஒருவர் எங்கு, எப்படிப் பிறக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய முடியாது. ஆனால், இன்று உலகம் பாதிக்கப்பட்டோருக்கு முதுகைக் காட்டி கொண்டு நிற்கிறது. என் இதயம் இதை ஏற்கவில்லை.

நான் இந்த வாசகம் பொறிக்கப்பட்ட ஷூவை அணியக் கூடாது என்று ஐசிசி கூறுகிறது. அது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று ஐசிசி கருதுகிறது. நான் அப்படிக் கருதவில்லை, நான் மனிதநேயக் கோரலையே முன் வைக்கிறேன். “நான் அவர்களின் பார்வையையும் முடிவையும் மதிக்கிறேன், ஆனால் எதிர்த்துப் போராடி ஒப்புதல் பெற முயல்வேன். சுதந்திரம் என்பது மனித உரிமை” என்று உஸ்மான் கவாஜா பதிவிட்டுள்ளார்.

உஸ்மான் கவாஜா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ஆடும் முதல் முஸ்லிம் வீரர் ஆவார். இவர் இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு எதிராக கருப்புப் பட்டை அணிந்து களமிறங்கினார். ஏற்கெனவே இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி இது போன்ற ஒன்றை 2014-ல் செய்ய நினைத்தபோதும் ஐசிசி தடை விதித்தது நினைவிருக்கலாம். ஆனால், இதே ஐசிசி ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ இயக்கத்துக்கான குறியீட்டு செய்கையை 2020 மற்றும் 2021-ல் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x