Published : 06 Dec 2023 05:11 PM
Last Updated : 06 Dec 2023 05:11 PM

BAN vs NZ | விசித்திரமான முறையில் அவுட்டான முஷ்பிகுர் ரஹிம்!

நியூஸிலாந்து அணி வங்கதேசத்தில் பயணம் மேற்கொண்டு 2-வது டெஸ்ட் போட்டியில் மிர்பூரில் ஆடி வருகின்றது. இதில் முதல் இன்னிங்ஸை வங்கதேசம் ஆடி வருகின்றது. அப்போது வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் ‘அப்ஸ்ட்ரக்டிங் த பீல்ட்’ என்ற காரணத்துக்காக அவுட் தீர்ப்பளிக்கப்பட்டு பெவிலியன் திரும்பியது சர்ச்சையாகியுள்ளது.

வங்கதேச அணி முதல் டெஸ்ட் போட்டியில் வென்று முதன் முதலாக நியூஸிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை வெல்லும் முயற்சியில் இன்று டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகின்றது. ஆனால் அந்த அணிக்கு எதுவும் நல்லபடியாகச் செல்லவில்லை. முஷ்பிகுர் ரஹிம் 35 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது கைலி ஜேமிசன் பந்து வீசினார். பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி சற்றே எழும்பியது.

அதை பின்னால் சென்று தடுத்தாடிய முஷ்பிகுர் ரஹிம் ஆடிய வேகத்திற்கு மிக இயல்பாக நகர்ந்து சென்று பந்தையும் கிளவ்வினால் தட்டி விட்டார். இது உண்மையில் முன்பெல்லாம் பந்து ஆட்டத்தில் இருக்கும் போது அதாவது டெட் ஆகாத போது பந்தைக் கையால் பிடித்தல் அதாவது ‘ஹேண்டில்ட் த பால்’ அவுட் என்று இருந்தது.

ஆனால் 2017-ல் விதிமுறைகளை ஐசிசி மாற்றியது. இதனையடுத்து பந்தைக் கையால் பிடிக்கும் அவுட்கள் ‘பீல்டுக்கு இடையூறு செய்தல்’ என்ற பிரிவின் கீழ் அவுட் என்று மாற்றப்பட்டது. முஷ்பிகுர் ரஹிம் தன் வலது கையினால் பந்தைத் தட்டி விட்டதையடுத்து நியூஸிலாந்து வீரர்கள் அப்பீல் செய்தனர். களநடுவர்கள் டிவி நடுவருக்கு தெரிவிக்க டிவி நடுவர் ‘பீல்டுக்கு இடையூறு செய்தல்’ என்று முஷ்பிகுர் ரஹீமுக்கு அவுட் கொடுத்தார்.

தேவையில்லாத அவுட். ஆனால் விசித்திரமான அவுட். ஏனெனில் பந்தை அவர் தடுத்தாடினார். பந்து ஸ்டம்புகளை நோக்கிக் கூடச் செல்லவில்லை, மிகவும் தள்ளிச் சென்றது. அதைப்போய் ஏன் தட்டி விட வேண்டும்? ஆனால் முஷ்பிகுர் மிகவும் இயல்பாக தன்னிச்சையாக அந்தக் காரியத்தைச் செய்தார்.

இதே இன்னிங்சில் ஆரம்பத்திலும் இத்தகைய முயற்சியில் முஷ்பிகுர் ரஹிம் ஈடுபட்டார். ஆனால் அப்போது பந்தை அவரால் தொட முடியவில்லை தப்பித்தார். 41-வது ஓவரில் அவரால் கட்டுப்படுத்த முடியாமல் பந்தை வலது கையினால் தட்டி விட்டு பெருந்தவறிழைத்தார். இதனால் வங்கதேச பேட்டிங் சரிவு கண்டு இப்போது 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்து முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

முஷ்பிகுர் இப்படி அவுட் ஆனது பற்றி மூத்த வீரர் தமிம் இக்பால் கூறும்போது, “80 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேல் ஆடிய ஒரு வீரர் தான் என்ன செய்கிறோம் என்று தெரிந்து செய்ய வேண்டும். வலைப்பயிற்சியின் போது வீரர்கள் பந்துகளை ஆடிவிட்டு அவர்களே எடுத்துக் கொடுப்பார்கள் அதே பழக்கம் இப்போதும் அவரை பீடித்து விட்டது” என்றார்.

முஷ்பிகுர் ரஹீமும் ஷஹாதத் ஹுசைனும் சேர்ந்து 57 ரன்களை 5வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். 47/4 என்ற சரிவு நிலையிலிருந்து இருவரும் ஸ்கோரை 104 ரன்களுக்கு உயர்த்திய போது முஷ்பிகுர் ரஹிம் பந்தை கையால் தொட்டு தவறிழைத்து வெளியேறினார். இந்த முறையில் ஏற்கெனவே ரமீஸ் ராஜா, ஜேசன் ராய், குணதிலக, மொஹீந்தர் அமர்நாத், லென் ஹட்டன், இன்சமாம் உல் ஹக், பென் ஸ்டோக்ஸ், அன்வர் அலி, முகமது ஹபீஸ் உள்ளிட்ட சில வீரர்கள் ஆட்டமிழந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x