Published : 31 Oct 2023 05:56 AM
Last Updated : 31 Oct 2023 05:56 AM

ஜஸ்பிரீத் பும்ராவை போன்று பாக். வீரர்கள் ஏன் பந்து வீசுவது இல்லை: விளக்குகிறார் வாசிம் அக்ரம்

வாசிம் அக்ரம்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவை போன்று பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் ஏன் பந்து வீசுவது இல்லை என்பதை விளக்கி உள்ளார் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்தினம் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிராக குறைந்த அளவிலான இலக்கை பாதுகாத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சேர்த்த 87 ரன்கள் உதவியுடன் 9 விக்கெட்கள் இழப்புக்கு 229 ரன்களே எடுத்தது.

எனினும் மொகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோரது அபாரமான பந்து வீச்சில் இங்கிலாந்து அணியை 34.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது இந்திய அணி.மொகமது ஷமி 22 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களையும், ஜஸ்பிரீத் பும்ரா 32 ரன்களை வழங்கி 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 24 ரன்களைவிட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாதத்தின் போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமிடம், ரசிகர் ஒருவர்,‘ஜஸ்பிரித் பும்ரா போல பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் ஏன் பந்துவீச முடியவில்லை?' என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில்அளித்து வாசிம் அக்ரம் கூறியதாவது:

இது பதில் சொல்வதற்கு மிகவும் கடினமான கேள்வி. ஜஸ்பிரீத் பும்ராஒரு சிறப்பான பந்து வீச்சாளர். அவரைப் போல உலகில் இப்போது யாரும் பந்துவீசவில்லை. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் குறைந்த அளவிலானடெஸ்ட் போட்டிகளிலேயே விளையாடுகிறார்கள். பும்ரா டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கிறார்.

காயத்தில் இருந்து மீண்டுவந்துள்ள அவர், தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஒருநாள் போட்டியை போன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பும்ரா வெற்றியாளராக திகழ்கிறார்.டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் எடுக்கவில்லை என்றால், கடினமான பந்துகளை வீசவில்லை என்றால், ஒருநாள் போட்டிகளிலும் குறிப்பாக 10-40 ஓவர் காலகட்டத்தில் பேட்ஸ்மேன்களை வீழ்த்துவது கடினம். அங்குதான் பிரச்சினை இருக்கிறது. வழக்கத்துக்கு மாறான அவரது பந்து வீச்சு பாணியால் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது, வேகம், யார்க்கர், பவுன்சர் என அனைத்து திறனையும் கொண்ட முழுமையான பந்து வீச்சாளராக பும்ரா திகழ்கிறார்.

இவ்வாறு வாசிம் அக்ரம் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x