Published : 10 Sep 2023 05:33 AM
Last Updated : 10 Sep 2023 05:33 AM

பாகிஸ்தான் பந்து வீச்சில் தடுமாற்றம் ஏன்? - மனம் திறக்கும் ஷுப்மன் கில்

கொழும்பு: பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடிக்கடி விளையாடாததால் அவர்களுடைய பந்துவீச்சு தாக்குதல்கள் முக்கிய போட்டிகளில் வித்தியாசத்தை ஏற்படுத்துவதாக இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் 32 பந்துகளை சந்தித்த நிலையில் வெறும் 10 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அந்த ஆட்டத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டர் 66 ரன்களுக்கு ஆட்டம் கண்டிருந்தது. இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுடன் இந்திய அணி இன்று மீண்டும் மோதுகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் கூறியதாவது: நாங்கள் வேறு சில அணிகளுக்கு எதிராக விளையாடுவது போல் பாகிஸ்தானுக்கு எதிராக அடிக்கடி விளையாடுவதில்லை. அவர்களின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக உள்ளது என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். மேலும் இதுபோன்ற பந்துவீச்சு தாக்குதல்களுக்கு எதிராக நீங்கள் அடிக்கடி விளையாடாதபோது அது முக்கிய போட்டிகளில் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

பாகிஸ்தான் வீரர்கள் மிகவும் வித்தியாசமான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் அவர்களுக்கென்று தனி சிறப்புகள் உள்ளன. ஷாகீன் ஷா அப்ரிடி பந்தை அதிக அளவில் ஸ்விங் செய்கிறார். நசீம் ஷா ஆடுகளத்தில் இருந்து கிடைக்கப்பெறும் உதவியுடன் சீரான வேகத்தில் வீசுகிறார். அவர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு சவால்களை முன்வைக்கின்றனர்.

கடந்த முறை போன்று இல்லாமல் தொடக்க வீரர்களாக நாங்கள் நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்தே பாகிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த வேண்டும். ரோஹித் சர்மா பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஏரியல் ஷாட் விளையாட அதிகம் விரும்புவார். பவர்பிளேவில் அவருடன் இணைந்து விளையாட நான் விரும்புகிறேன். நாங்கள் இருவரும் சற்று வித்தியாசமானவர்கள். நாங்கள் எப்படி ஷாட்களை மேற்கொள்கிறோம், சூழ்நிலைகளை சமாளிக்கிறோம் என்பதில்தான் அனைத்தும் இருக்கிறது. இதுவே எதிரணி எங்களை கட்டுப்படுத்துவதில் வித்தியாசத்தை ஏற்படுத்தும். பாகிஸ்தான் போட்டிக்கு எதிரான அழுத்தம் என்பது மற்ற போட்டிகளில் இருந்து சற்று வித்தியாசமானது. நீங்கள் எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும் அழுத்தம் இருக்கும். அது ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணியாக இருந்தாலும் சரி, எங்களிடம் அதே அளவு அழுத்தம் இருக்கும். இவ்வாறு ஷுப்மன் கில் கூறினார்.

பாகிஸ்தான் லெவன் அறிவிப்பு: இந்தியாவுக்கு எதிராக விளையாடும் லெவனை பாகிஸ்தான் அணி நேற்றே அறிவித்தது.

அணி விவரம்: பாபர் அஸம் (கேப்டன்), ஷதப் கான், ஃபஹர் ஜமான், இமாம் உல் ஹக், சல்மான் அலி அஹா, இஃப்தி கார் அகமது, முகமது ரிஸ்வான், நசிம் ஷா, ஷாகீன் ஷா அப்ரிடி, ஹரிஸ் ரவூஃப், பஹீம் அஷ்ரப்.

மழை மிரட்டல்: கொழும்பு நகரில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீத வாய்ப்புகள் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் பாதிக்கப்படக்கூடும். ஒருவேளை இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு நடத்த முடியாமல் போனால் ரிசர்வ் நாளான நாளை (11-ம் தேதி) போட்டி தொடர்ந்து நடத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x