Published : 09 Dec 2017 04:12 PM
Last Updated : 09 Dec 2017 04:12 PM
வங்கதேச பிரீமியர் லீக், டாக்காவில் நடைபெற்ற டி20 போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக ஆடிவரும் கிறிஸ் கெய்ல், குல்னா டைட்டன்ஸ் பந்து வீச்சை புரட்டி எடுத்து அதிரடி சதம் கண்டார்.
இதனால் ரங்பூர் ரைடர்ஸ் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 15.2 ஓவர்களில் இலக்கை ஊதித்தள்ளியது. முதலில் பேட் செய்த குல்னா 6 விக், இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. ரங்பூர் அணியில் மலிங்கா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மஷ்ரபே மோர்டசா 4 ஓவர்களில் 23 ரன்களையே விட்டுக் கொடுத்து சிக்கனம் காட்டினார்.
இந்தச் சதம் பங்களாதேஷ் பிரீமியர் லீகில் கிறிஸ் கெய்ல் எடுக்கும் 4-வது சதமாகும். மொத்தமாக டி20 கிரிக்கெட்டில் கெயிலின் 19-வது சதமாகும் இது.
கிறிஸ் கெய்ல் 51 பந்துகளில் 14 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உட்பட 126 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். 14 சிக்சர்கள் இந்தத் தொடரில் புதிய சாதனையாகும். 2013-ல் டாக்கா கிளேடியேட்டர்கள் அணிக்காக கெய்ல் அடித்த அதிகபட்ச 12 சிக்சர்கள் சாதனையை அவரே முறியடித்தார்.
கெய்ல் 2 சிக்சர்களுடன் தொடங்கினார், ஆனால் மறு முனையில் பிரெண்டன் மெக்கல்லம், சோஹாக் காஜி ஆகியோரை ஜோப்ரா ஆர்ச்சர் ஒரே ஓவரில் வெளியே அனுப்பினார். 25/2 என்ற நிலையிலிருந்து மைதானத்தின் சகலபகுதிகளுக்கும் குல்னா பீல்டர்களை விரட்டிக் கொண்டிருந்தார் கிறிஸ் கெய்ல். குறிப்பாக ஆர்ச்சர் மீது கெய்லின் அதிரடி மட்டைப் பாய்ந்தது, இவரை ஒரே ஓவரில் 20 ரன்கள் விளாசினார். ஒரு சிக்ஸ் நேராகச் சென்றது. அபு ஜயேத் பந்தும் நேராக இறங்காமல் சிக்ஸ் ஆனது. .மொகமது இர்பானின் லெக் பிரேக்குகள் 2 சிக்சர்களுக்கு பறந்தது. இதில் முதல் சிக்சரில் 23 பந்துகளில் கெய்ல் அரைசதம் எட்டினார். தன் சக மே.இ.தீவுகள் வீரர் பிராத்வெய்ட்டையும் கெயில் விட்டுவைக்கவில்லை. அடித்த அடியில் 45 பந்துகளில் சதம் கண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT