Published : 12 Aug 2023 06:15 AM
Last Updated : 12 Aug 2023 06:15 AM

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி - பட்டம் வெல்வதற்கு மலேசியாவுடன் இன்று இந்திய அணி பலப்பரீட்சை

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டு கோல் அடித்த மகிழ்ச்சியில் இந்திய வீரர் மன்தீப் சிங். (அடுத்த படம்) கோல் அடித்த மகிழ்ச்சியை சக வீரருடன் கொண்டாடும் கார்த்தி செல்வம்.படங்கள்:எஸ்.சத்தியசீலன்

சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்திய இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் இந்திய அணி, 19-வது இடத்தில் உள்ள ஜப்பானுடன் மோதியது. இதில் முதல் பாதியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. 2-வது கால் பகுதியில் இந்திய அணி தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டது.

19-வது நிமிடத்தில் ஹர்திக் சிங், சுமித் கூட்டணி அமைத்து பந்தை வட்டத்துக்குள் கடத்திச் சென்றனர். இதில் சுமித் இலக்கை நோக்கி அடித்த பந்து இடைமறிக்கப்பட்டது. ஆனால் அருகில் நின்ற ஆகாஷ்தீப் சிங் விரைவாக செயல்பட்டு பந்தை கோல் வலைக்குள் திணித்தார். இதனால் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அடுத்த 4-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

இதில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் வலுவாக அடித்த ஷாட், ஜப்பான் அணியின் இரு டிபன்டர்களுக்கு ஊடாக கோல் வலைக்குள் பாய்ந்தது. இதனால் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. 30-வது நிமிடத்தில் மன்தீப் சிங் நடுப்பகுதியில் இருந்து பந்தை ஜப்பான் அணியின் இரு டிபன்டர்களுக்கு ஊடாக கடத்திச் சென்று பீல்டு கோல் அடிக்க 2-வது கால்பகுதியின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற முன்னிலையை நோக்கி நகர்ந்தது.

39-வது நிமிடத்தில் இந்திய அணி 4 -வது கோலை அடித்தது. மன்தீப் சிங், ஜப்பான் அணியின் இரு டிபன்டர்களை கடந்து சுமித் வழங்கிய பந்தை அவர், அற்புதமாக கோலாக மாற்றினார். 51-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் தொலைவில் இருந்து ஷம்ஷீருக்கு பந்தை அனுப்பினார். அவர், கார்த்தி செல்வத்துக்கு அனுப்ப அதனை அவர், நெருக்கமான சூழ்நிலையில் கோல்கீப்பர் யோஷிகவாவின் தடுப்பையும் மீறி கோலாக மாற்றினார். இறுதி வரை போராடியும் ஜப்பான் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது. முடிவில் இந்திய அணி 5 -0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டியில் நுழைந்தது.

தென் கொரியா வெளியேற்றம்: முன்னதாக நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் மலேசியா, நடப்பு சாம்பியனான தென் கொரியாவுடன் மோதியது. இதில் மலேசியா 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி சார்பில் நஜ்மி ஜஸ்லான் ( 9 மற்றும் 21-வது நிமிடங்கள்), ஷெல்லோ சில்வரிஸ் (47 மற்றும் 48-வது நிமிடங்கள்) ஆகியோர் தலா இரு கோல்களும் அபு கமல் அஸ்ராய் (3-வது நிமிடம்), பைசல் சாரி (19-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி வரலாற்றில் மலேசியா இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதன்முறையாகும். இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - மலேசியா அணிகள் மோதுகின்றன. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அரை இறுதியில் தோல்வி அடைந்த தென் கொரியா - ஜப்பான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x