Published : 07 Aug 2023 06:52 AM
Last Updated : 07 Aug 2023 06:52 AM

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி | ஜப்பானுடன் போராடி டிரா செய்த பாகிஸ்தான்

கோல் அடித்த மகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர்கள்.

சென்னை: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் ஜப்பான் அணியுடனான ஆட்டத்தை பாகிஸ்தான் வீரர் போராடி டிரா செய்தனர்.

சென்னையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டம் 3-3 என்ற கணக்கில் டிராவில் முடிவடைந்தது. மாலை 6.15 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடத்திலேயே பாகிஸ்தான் வீரர் அப்துல் ராணா ஒரு கோலடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். ஆனால், அடுத்த 4 நிமிடங்களிலேயே ஜப்பான் இதற்கு பதிலடி கொடுத்தது. 13-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் செரன் தனகா ஒரு கோலடித்து சமநிலை பெறச் செய்தார்.

25-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்திய பாகிஸ்தான் ஒரு கோல் போட்டது. முகமது கான் இந்த கோலை அடித்தார். இதனால் பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

37-வது நிமிடத்தில் 2-வது கோலை அடித்து ஜப்பான் வீரர்கள் சமன் செய்தனர். ஜப்பான் வீரர் ரியோசெய் கட்டோ, அபாரமான ஃபீல்டு கோலை அடித்தார்.

இதன்பிறகு சுதாரித்து ஆடிய ஜப்பான் வீரர்கள் 45-வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். பெனால்டி கார்னர் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய ஜப்பான் வீரர் ஒஹாஷி மசாக்கி இந்த கோலை அடித்தார்.

அதன் பின்னர் கோலடிக்க பாகிஸ்தான் வீரர்கள் போராட வேண்டியிருந்தது. 55-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்திய முகமது கான் இந்த கோலை அடித்தார். இதனால் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x