Published : 01 Aug 2023 07:43 AM
Last Updated : 01 Aug 2023 07:43 AM

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இன்று 3-வது ஒருநாள் போட்டி: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டி

டிரினிடாட்: இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று டிரினிடாடில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து தற்போது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஒரு நாள் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி சர்வதேச ஒரு நாள் போட்டி டிரினிடாடிலுள்ள பிரையன் லாரா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி விடும். எனவே தொடரை வெல்லும் நோக்கத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.

முதல் போட்டியில் 115 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தும்போதே 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி வெற்றிபெற்றது. ஆனால் 2-வது போட்டியில் மோசமாக விளையாடி தோல்வி கண்டது.

முக்கியமான போட்டி என்பதால் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சஞ்சு சாம்சன் ஆகியோரிடமிருந்து ஓர் அபாரமான இன்னிங்ஸ் வெளிப்படும் என்று எதிர்பார்க்கலாம். தோல்வி கண்ட 2-வது போட்டியில் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு விளையாடும் முனைப்பில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

டி20 போட்டிகளில் விளையாடுவது போன்று விளையாடி விரைவில் ஆட்டமிழக்கிறார் சூர்யகுமார் யாதவ். எனவே, அவர் இந்தப் போட்டியில் தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றிக் கொண்டு விளையாட முயற்சிக்கக்கூடும்.

இதைப் போலவே ஷுப்மன் கில், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான இன்னிங்ஸை விளையாடுவதற்கு முயற்சிக்கக்கூடும். பவுலிங்கில் ஷர்துல் தாக்குர், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகேஷ் குமார் ஆகியோர் எதிரணிக்கு சவால்விடக் காத்திருக்கின்றனர்.

2-வது போட்டியில் ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ் மட்டுமே சிறப்பாக பந்துவீசினர். மற்றவர்களது பந்துவீச்சு எடுபடவில்லை. எனவே, கடைசிப் போட்டியில் முகேஷ் குமார், உம்ரான் மாலிக் ஆகியோர் சிறப்பாக பந்துவீச முயற்சிக்கக்கூடும்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் 2-வது போட்டியில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். எனவே கடைசி போட்டியிலும் அவரிடமிருந்து சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

அதைப் போலவே ஷிம்ரன் ஹெட்மயர், கீசி கார்ட்டி, அலிக் அத்தானஸ், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ் ஆகியோரும் தங்களது திறமையை நிரூபிக்கக் காத்திருக்கின்றனர்.

பவுலிங்கில் கைல் மேயர்ஸ், ரொமாரியோ ஷெப்பர்டு, அல்சாரி ஜோசப், மோட்டி ஆகியோர் எதிரணிக்கு அச்சுறுத்தல் தர தயாராக உள்ளனர்.

அணி விவரம்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெயதேவ் உனத்கட், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.

மேற்கு இந்தியத் தீவுகள்: ஷாய் ஹோப் (கேப்டன்), ரோமன் பவல், அலிக்அத்தானஸ், யானிக் கரியா, கீசி கார்ட்டி, டோமினிக் டிரேக்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர், அல்சாரி ஜோசப், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்டு, கெவின் சின்கிளேர், ஓஷான் தாமஸ்.

போட்டி நேரம்: இரவு 7 மணி.

நேரலை: தூர்தர்ஷன், ஜியோ சினிமா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x