Published : 28 Nov 2017 03:31 PM
Last Updated : 28 Nov 2017 03:31 PM
தற்போது அஸ்வின்தான் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட்டில் 8 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் விரைவாக 300 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின்.
ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் டெனிஸ் லில்லி 56 போட்டிகளில் 300 விக்கெட்டுகளை எட்டி, நீண்ட காலமாக சாதனையை தன் வசம் வைத்திருந்தார். இந்நிலையில் 54 டெஸ்ட்டில் அஸ்வின் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றி லில்லியின் சாதனையை 36 வருடங்களுக்குப் பிறகு முறியடித்தார்.
இதனைத் தொடர்ந்து அஸ்வினுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அஸ்வினின் சாதனைக்கு இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ''அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.தற்போது அஸ்வின்தான் உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர். தற்போது அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் இடம் பெறவில்லை. எனினும் விரைவில் அவர் ஒரு நாள்போட்டிகளில் இடம்பெற்று ஆச்சரியங்களை புரிவார் என்று நம்புகிறேன்'' என்றார்.
இலங்கை - இந்தியா இடையே அதிக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதாக சமீபத்தில் இந்திய கேப்டன் கோலி தெரிவித்திருந்தார்.
இதுபற்றி முரளிதரன் கூறும்போது, ''இந்தியா - இலங்கை இடையே அதிக போட்டிகள் நடைபெற்றதாக என்னால் கூற முடியாது. ஒருவேளை தொடர்ந்து வெற்றி பெற்றதால் விராட் கோலி சோர்வடைந்திருக்கலாம்'' என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT