Last Updated : 30 Nov, 2017 10:34 AM

 

Published : 30 Nov 2017 10:34 AM
Last Updated : 30 Nov 2017 10:34 AM

தமிழக அணிக்கு என்னவாயிற்று?- ரஞ்சிக் கோப்பையில் வெற்றியின்றி வெளியேறியது ஏன்?

நடப்பு ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் தமிழக அணி ஒரு வெற்றியைக் கூட பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியிருப்பது பலருக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்களான அஸ்வின் கிரிஸ்ட், டி.நடராஜன் ஆகியோர் காயமடைந்ததையடுத்து பந்து வீச்சில் தாக்கம் குறைவாக இருந்தது. இவர்கள் இருவரும்தான் கடந்த சீசனில் 62 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஸ்பின்னர்கள் பந்துகளில் ஊடுருவம் தன்மை சிறிதும் இல்லை.

கே.விக்னேஷ் மட்டுமே 6 போட்டிகளில் 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், ஆனாலும் போதுமானதாக இல்லை. 6 போட்டிகளில் எதிரணியினரின் 20 விக்கெட்டுகளை ஒரேயொரு முறை ஆந்திராவுக்கு எதிராக கைப்பற்றியது. மும்பைக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின் கூட விக்கெட்டுகளை வீழ்த்த திணறினார்.

இடது கை ஸ்பின்னர் ராஹில் ஷா மீதான அதீத நம்பிக்கைக்கு ஈடுகொடுக்கும் வகையில் அவரது பந்து வீச்சு இல்லை. இவர் திரும்பும் பிட்சில் நன்றாக வீசுகிறார், மற்ற பிட்ச்களில் சாதாரணமாக வீசுகிறார்.

முன்னாள் தமிழக லெக் ஸ்பின்னர் வி.வி.குமார் கூறும்போது, பிட்ச்சில் ஆதரவு இல்லையெனில் பவுலர்கள் தங்கள் கற்பனை வளத்தைப் பயன்படுத்த வேண்டும். ஸ்பின் பிட்ச்கள், வேகப்பந்து வீச்சு ஆட்டக்களங்கள் நீங்கலாக தமிழக அணியின் பந்து வீச்சு சாதாரணமாகவே இருந்தது என்கிறார். ராஹில் ஷாவின் சராசரி 54.33. சாய் கிஷோரின் சராசரி 86.33.

சீசன் தொடக்க ஆட்டத்தில் ஆந்திராவுக்கு முன்னிலை கொடுத்து விட்டு 2-வது இன்னிங்சில் 54 ஓவர்களில் 112/2 என்று மந்தமாக ஆடியது தமிழக அணி, அப்போது அடித்து ஆடியிருக்க வேண்டும் என்கின்றனர் கிரிக்கெட் ஆர்வலர்கள். இதே தடுப்பாட்ட உத்திதான், எதிர்மறை உத்திதான் லீக் போட்டிகள் நெடுகவும் தமிழக அணியிடத்தில் காணப்பட்டது. மேலும் ஆந்திராவுக்கு எதிராக அந்த அணியை 64/5 என்று தடுமாறச் செய்து விட்டு பிறகு 300 ரன்கள் அடிக்கவிட்டனர்.

திரிபுராவுக்கு எதிராக ஓவருக்கு 4 ரன்கள் விகிதத்தில் தமிழ்நாடு அணி 357/4 என்று விளாசினாலும் மழை, போதிய வெளிச்சமின்மை ஆகியவற்றினால் சென்னையில் கூட வெற்றி சாத்தியமில்லாமல் போனது.

ஒடிசா அணிக்கு எதிராக 530/8 என்று பெரிய ஸ்கோரை அடித்தும் அந்த அணி முன்னிலை பெற்றது, காரணம் பந்து வீச்சில் தாக்கம் இல்லை. 17 வயது விக்கெட் கீப்பர் ராஜேஷ் தூப்பர் அன்று முன்னிலையை உறுதி செயதார். இதே நிலைதான் மத்தியப் பிரதேசம், பரோடா அணிகளுக்கு எதிராகவும் இருந்தது.

பவுலர்களை அதிகம் தேர்வு செய்வது தீர்வு கிடையாது. மத்திய பிரதேச அணிக்கு எதிராக 3 ஆல்ரவுண்டர்களைச் சேர்த்தனர். ஆனால் வெற்றி பெற்றேயாக வேண்டிய நிலையில் இது கைகொடுக்கவில்லை.

ஆந்திராவுக்கு எதிராக வாஷிங்டன் சுந்தரை சரியாகப் பயன்படுத்தவில்லை, ஏன் என்பதற்கு அபினவ் முகுந்த் கூறுகையில் 5 பவுலர்கள் இருக்கும் போது யாராவது ஒருவரைக் குறைவாகவே பயன்படுத்த நேரிடும் என்றார். மேலும் திரிபுராவுக்கு எதிராக தொடக்கத்தில் களமிறங்கி வாஷிங்டன் சுந்தர் 159 ரன்கள் எடுத்தார், ஆனால் மத்திய பிரதேசத்துக்கு எதிராக மீண்டும் மிடில் ஆர்டரில் இறங்குகிறார்.

மேலும் அபினவ் முகுந்த் தொடர்ந்து ரன்கள் இல்லாமல் சொதப்பி வருவதும் தமிழக அணியின் பின்னடவைக்கு முக்கிய காரணமாக உள்ளது. பாபா அபராஜித், பாபா இந்திர ஜித் அற்புதமாக ஆடி வருகின்றனர். இருவரும் சேர்ந்து 822 ரன்கள் எடுத்துள்ளனர். பாபா அபராஜித் 417 ரன்களை 104 என்ற சராசரியின் கீழ் பெற்றுள்ளார். யோ மகேஷ் பின்னால் இறங்கி 2 சதங்களை அடித்துள்ளார்.

தமிழக அணியின் பின்னடைவு குறித்து பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனிட்கர் கூறும்போது, “ஆட்டத்தில் சீரற்ற முறையில் செயல்பட்டோம். எங்கள் திறமைக்கு வெகு கீழே ஆடினோம். நன்றாக ஆடியபோதும் அதனை தக்கவைக்க முடியவில்லை. எதிரணியினரை விரைவில் 5 விக்கெட்டுகளைக் காலி செய்வோம் ஆனால் பிறகு அவர்களை ரன் எடுக்க விட்டுவிடுவோம். முக்கியத் தருணங்களில் 5-6 விக்கெட்டுகளை எதிரணியினர் இழந்திருக்கும் போது, பிடியை நழுவ விடுவோம், 4 ஓவர்களில் 25-30 ரன்களை அவர்கள் எடுக்க அனுமதித்து விட்டோம்.” என்றார்.

தமிழ்நாடு அணி கடைசியாக ரஞ்சி டிராபியை வென்றது 1988-ல். அதிலிருந்தே ரஞ்சி சாம்பியன் பட்டத்தை நோக்கி தமிழக அணி மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்விகளைச் சந்தித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x