Published : 21 Jul 2023 07:48 AM
Last Updated : 21 Jul 2023 07:48 AM

இலங்கை அணியை வீழ்த்தியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி வீரர்கள்

காலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.

காலே நகரில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 312 ரன்களும் பாகிஸ்தான் அணி 461ரன்களும் எடுத்தன. 149 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 83.1 ஓவரில் 279 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

131 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 4-வதுநாள் ஆட்டத்தின் முடிவில் 15 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது. அப்துல்லா ஷபிக் 8,ஷான்மசூத் 7 ரன்களில் பிரபாத் ஜெயசூர்யா பந்தில் ஆட்டமிழந்தனர். நோமன் அலி (0), ரன் அவுட் ஆனார். இமாம் உல்ஹக் 25, கேப்டன் பாபர் அஸம் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 32.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபர் அஸம் 24, சவுத்ஷகீல் 30, சர்ப்ராஸ் அகமது 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். இமாம் உல்ஹக் 84 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்களும், அகா சல்மான் 6 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்கள் வீழ்த்தினார். 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக முதல் இன்னிங்ஸில் 208 ரன்கள் விளாசிய சவுத் ஷகீல் தேர்வானார். 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 24-ல் கொழும்பு நகரில் தொடங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x