Published : 27 Jun 2023 07:47 AM
Last Updated : 27 Jun 2023 07:47 AM

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் | இந்தியா - குவைத் இன்று பலப்பரீட்சை

இந்திய அணி வீரர்கள்

பெங்களூரு: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் நேபாளத்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

இந்நிலையில், தனது கடைசி லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த குவைத் அணியுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. குவைத்தும் ஏற்கெனவே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் நேபாளத்தையும், 2-வது ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானையும் தோற்கடித்து இருந்தது. இதனால் இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் அரை இறுதி சுற்றை சிறந்த முறையில் எதிர்கொள்வதற்கான பயிற்சி களமாக இருக்கும்.

இந்தியா, குவைத் ஆகிய இரு அணிகளுமே தலா 6 புள்ளிகளை பெற்றுள்ள போதிலும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் குவைத் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2-வது இடம் வகிக்கிறது. இதனால் இன்றைய ஆட்டம் ‘ஏ’ பிரிவில் யார்? முதலிடத்தை பிடிப்பது என்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ள இந்திய அணியின் டிபன்ஸ் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த தொடரில் இதுவரை இந்திய அணி எதிரணியிடம் இருந்து கோல்கள் ஏதும் வாங்கவில்லை. இருப்பினும் குவைத் போன்ற வலுவான அணிக்கு எதிராக மிட்ஃபீல்ட் மற்றும் முன்கள வீரர்கள் சிறந்த திறனை வெளிப்படுத்த வேண்டும்.

நேபாளம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியின் டிபன்ஸை ஊடுருவி கோல் அடிக்க இந்திய அணி தடுமாற்றத்தை சந்தித்தது. ஒரு மணி நேரத்துக்கு பிறகே இந்திய அணியால் கோல் அடிக்க முடிந்தது. குவைத் அணியின் டிபன்ஸ் அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்டுள்ளதால் இந்திய அணிக்கு கூடுதல் தடைகள் உருவாகக்கூடும்.

இந்திய அணியில் கோல் அடிக்கும் முக்கிய ஆயுதமாக சுனில் சேத்ரி திகழ்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய அவர், நேபாள அணிக்கு எதிராக அணியின் முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றுக்கொடுத்திருந்தார். இதனால் அவர், மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இருப்பினும் வலுவான குவைத் அணிக்கு எதிரான கோல் அடிப்பது அவ்வளவு எளிதானது இல்லை என்றும் கருதப்படுகிறது.

இந்தியா - குவைத் அணிகள் இதுவரை 3 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் குவைத் 2 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்தது. இந்தியா ஒரு ஆட்டத்தில் வெற்றியை பதிவு செய்திருந்தது. - பிடிஐ

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x