Published : 20 Jun 2023 09:10 AM
Last Updated : 20 Jun 2023 09:10 AM

ஆசிய வாள்வீச்சு: வெண்கலம் வென்று பவானி தேவி சாதனை

பவானி தேவி | கோப்புப்படம்

புதுடெல்லி: ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் சீனாவில் உள்ள வுக்ஸி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான சேபர் பிரிவு அரைஇறுதி சுற்றில் இந்தியாவின் சி.ஏ.பவானி தேவி, உஸ்பெகிஸ்தானின் ஜெய்னாப் தயிபெகோவாவுடன் மோதினார். இதில் கடுமையாக போராடிய பவானி தேவி 14-15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். அரை இறுதியில் தோல்வி அடைந்த பவானி தேவி வெண்கலப் பதக்கம் பெற்றார். இதன் மூலம் ஆசியவாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் பவானி தேவி.

முன்னதாக நடைபெற்ற கால் இறுதிசுற்றில் பவானி தேவி 15-10 என்ற கணக்கில் உலக சாம்பியனான ஜப்பானின் மிசாகி எமுராவை தோற்கடித்து அனைவரது பார்வையையும் தன் மீது குவித்திருந்தார். மிசாகிஎமுரா கடந்த 2022-ம் ஆண்டு எகிப்தின் கெய்ரோவில் நடைவெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். மிசாகிக்கு எதிராக பவானி பெற்ற முதல் வெற்றி இதுவாகும், ஏனெனில் அவர் கடந்த காலங்களில் அவருக்கு எதிராக அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தார்.

பவானி தேவியின் வரலாற்று சாதனைக்கு இந்திய வாள்வீச்சு சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “இந்திய வாள்வீச்சுக்கு இது மிகவும் பெருமையான நாள். இதுவரை யாராலும் சாதிக்க முடியாததை பவானி தேவி சாதித்துள்ளார். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வாள்வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

பவானி தேவி, அரையிறுதியில் தோற்றாலும், போட்டி மிகவும் நெருக்கமாக இருந்தது. ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசம் இருந்தது. அதனால் இது ஒரு பெரிய அளவிலான முன்னேற்றம். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x