Published : 24 Oct 2017 08:49 PM
Last Updated : 24 Oct 2017 08:49 PM
சூதாட்டச் சர்ச்சையில் இரு ஆண்டுகள் தடை விலகிய நிலையில் அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் களமிறங்க உள்ளன.
இந்த அணிக்காக விளையாடிய வீரர்கள் கடந்த இரு சீசனிலும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் லயன்ஸ் அணிகளுக்காக களமிறங்கினார்கள். இந்நிலையில் ஐபிஎல் ஆட்சிமன்றக்குழு ஒரு புதிய திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
இந்த திட்டமானது, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் அணிகள் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்கப்படுமானால் மகேந்திர சிங் தோனி, மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடக்கூடும். ஐபிஎல் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் ஒருவர் கூறும்போது, “குறைந்தபட்சம் 3 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என நாங்கள் முன்மொழிய உள்ளோம். இதில் இரு வெளிநாட்டு வீரர்களும், ஒரு இந்திய வீரரும் அடங்குவார்.
இதனால் கடந்த இரு ஆண்டுகளாக புனே, குஜராத் அணிக்காக விளையாடிய வீரர்களை சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் தக்க வைத்துக்கொள்ள முடியும். இந்த திட்டத்தை அடுத்த மாதம் நடைபெறும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் பயிற்சி பட்டறையில் முன்வைக்க உள்ளோம்” என்றார்.
இதற்கிடையே வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் எண்ணிக்கை 3 முதல் 5 வரை இருக்கக்கூடும். இது அணி உரிமையாளர்களில் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொள்வதை பொறுத்து அமையும் என ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.
மேலும் ஒரு அணியின் ஒட்டுமொத்த ஏலத் தொகையை ரூ.60 கோடியில் இருந்து ரூ.75 கோடியாக உயர்த்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் ஒரு சில அணிகள் இந்த தொகையை ரூ.80 கோடியாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT