Published : 02 Jun 2023 07:15 AM
Last Updated : 02 Jun 2023 07:15 AM

மல்யுத்த வீராங்கனைகளிடம் காவல்துறையினர் நடந்த விதம் மிகவும் கவலை அளிக்கிறது: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கருத்து

கோப்புப்படம்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரை கைது செய்யக்கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 28-ம் தேதி வீராங்கனைகள் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது பேரணியாக செல்ல முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது போலீசார் வீராங்கனைகளை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றினர். இதையடுத்து ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் நாட்டுக்காக வென்ற பதக்கங்களை ஹரித்துவாரில் உள்ள கங்கை நதியில் வீசப்போவதாக சாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் உள்ளிட் டோர் அறிவித்தனர்.

பதக்கங்களையும் எடுத்துக் கொண்டு ஹரித்வாருக்கு சென்ற வீரர், வீராங்கனைகளை தடுத்து நிறுத்திய விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் விருதுகளை வீச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். இதை ஏற்று வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அங்கிருந்து சென்றனர்.

இதற்கிடையே பேரணி சென்ற வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மல்யுத்த வீராங்கனைகள், வீரர்களை காவல் துறையினர் நடத்திய விதம் மிகவும் கவலையளிக்கிறது. மல்யுத்த வீரர் களின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு பக்க சார்பற்ற முறையில் விசாரணை தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அத்தகைய குற்றவியல் விசாரணைக்கான முதல் படி எடுக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்.

குற்றச்சாட்டுகளின் ஆரம்பத்திலிருந்தே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, உலக மல்யுத்த கூட்டமைப்புடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. இந்த விவகாரத்தில் உலக மல்யுத்த கூட்டமைப்பு ஏற்கெனவே நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தியாவில் மல்யுத்த விளையாட்டு நிர்வாகத்தைப் பொறுத்த வரையில், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உலக மல்யுத்த கூட்டமைப்பை தகுதிவாய்ந்த விளையாட்டு ஆணையமாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆதரிக்கிறது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தற்போது பொறுப்பில் இல்லை என்று உலக மல்யுத்த கூட்டமைப்பு எங்களிடம் தெரிவித்துள்ளது. சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான வழிகாட்டுதல்களின் படி விளையாட்டு வீரர்களை துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் செய்தல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் உலக மல்யுத்த கூட்டமைப்புக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஆதரவு அளிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

‘நீதி கிடைக்கும் வரை போராடுவோம்’

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக நேற்று விவசாயிகள் சங்கத்தினர் முசாபர்நகரில் மகா பஞ்சாயத்தை கூட்டினார்கள். இதன் பின்னர் பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் கூறும்போது, ஹரியானாவில் இன்று நடைபெறும் கூட்டத்தில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். தேவைப்பட்டால் நாங்கள் ஜனாதிபதியிடம் செல்வோம். நீதி கிடைக்கும் வரை போராடுவோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x