

தைப்பூசத் திருவிழாவையொட்டி பழநி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தர்கள்.
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூசத் திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் நாளை (ஜன. 26) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பிப். 1-ம் தேதி மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நாளை (ஜன. 26) காலை 9.50 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி ரத வீதிகளில் வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
விழாவின் 6-ம் நாளாான வரும் 31-ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. அன்று இரவு சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் உலா வருவார். விழாவின் முக்கிய நிகழ்வாக பிப். 1-ம் தேதி தைப்பூசத்தன்று காலை 5 மணிக்கு சண்முகநதிக்கு எழுந்தருளல், காலை 11.15 மணிக்கு மேல் தேரில் சுவாமி எழுந்தருளல், மாலை 4 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற உள்ளது.
நான்கு ரத வீதிகளில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அன்று இரவு தந்தப்பல்லக்கில் தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். பிப். 4-ம் தேதி காலை திருவூடல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு தெப்பத்தேர் நடைபெறும். அன்று இரவு 11 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவுபெறும்.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, மாலை அணிந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் நாளை (ஜன. 26) முதல் 10 நாட்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகே உள்ள பக்தர்கள் ஓய்வுக்கூடத்தில் தினமும் 14,000 பேர், பழநி அருகேயுள்ள கொங்கூர் பக்தர்கள் ஓய்வுக்கூடத்தில் தினமும் 6,000 பேர் என மொத்தம் 20,000 பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட உள்ளது.