

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி கோயிலில் இன்று (மார்ச் 6) காலை சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது.
சனி பகவான் இன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இதையொட்டி, அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முன்னதாக, கும்ப கலச பூஜை, சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சனீஸ்வர பகவானுக்கு வெள்ளிக்கவசம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று பரிகார பூஜை செய்தனர். அப்போது பக்தர்கள் எள் விளக்கேற்றி வழிபட்டனர். இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டும் சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளன.
திருநள்ளாறு சனீஸ்வர பகவான்: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு புதுச்சேரி - காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், திரவியப் பொடிகள், பழம், பஞ்சாமிர்தம், தேன், தயிர், சந்தனம், பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து சனீஸ்வர பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.