

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிப்.12-ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட உள்ள நிலையில், மாதாந்திர வழிபாடு தரிசனத்துக்கான முன்பதிவுகள் தொடங்கின.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர ஜோதி வழிபாடுகள் அனைத்தும் நிறைவடைந்து கடந்த 20-ம் தேதி நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில், கும்பம் (மாசி) மாத வழிபாட்டுக்காக பிப்.12-ம் தேதி மாலையில் நடை திறக்கப்பட உள்ளது.
சபரிமலையைப் பொறுத்தளவில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலமே தரிசனம் செய்ய முடியும். இந்நிலையில் வரும் மாதாந்திர பூஜை முன்பதிவுக்கான அனுமதி இன்று தொடங்கின.
பிப்.17-ம் தேதி வரை நடைதிறக்கப்பட்டு இருக்கும் என்பதால் பக்தர்கள் தங்களுக்கான தேதி, நேரம் போன்றவற்றை முன்பதிவு செய்து வருகின்றனர்.
மண்டல, மகரஜோதி காலங்களில் நெரிசலும், தரிசனத்துக்கு தாமதமும் ஏற்படுவது வழக்கம். ஆகவே மாதாந்திர வழிபாடுகளில் சபரிமலை செல்ல பக்தர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.