

புதுடெல்லி: சுவாமிமலையின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பெருமையைப் பிரதிபலிக்கும் நிரந்தர அஞ்சல் முத்திரையை அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியது.
இது குறித்து அஞ்சல் துறை வெளியிட்ட தகவல்: சுவாமிமலை துணை அஞ்சல் அலுவலகத்தில், சுவாமிமலை முருகனின் ஆன்மிக, வரலாற்று மற்றும் கலாச்சார சிறப்பை போற்றும் வகையில், இன்று அஞ்சல் துறையால் நிரந்தர அஞ்சல் முத்திரை (Permanent Pictorial Cancellation) அறிமுகப்படுத்தப்பட்டது.
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த நிரந்தர அஞ்சல் முத்திரையில், தமிழ் எழுத்தான “ஓம்” முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளது. இது பிரணவ மந்திரத்தின் தெய்வீகத்தையும், சுவாமிமலையின் ஆன்மிக அடையாளத்தையும் பிரதிபலிக்கிறது.
சுவாமிமலையில் இறைவன் முருகன், சிவபெருமானுக்கு “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை உபதேசித்தார் என்ற புராண வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
“ஓம்” என்ற தமிழ் வடிவத்தின் இணைப்பு, இந்த நிரந்தர அஞ்சல் முத்திரைக்கு கூடுதல் ஆன்மிக, கலாச்சார மற்றும் பாரம்பரிய சிறப்பை வழங்குவதுடன், தமிழர் மரபு மற்றும் சுவாமிமலையின் தனித்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.
இந்த முயற்சியின் மூலம், சுவாமிமலையின் ஆன்மிக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை அஞ்சல் சேவையின் வாயிலாக நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் பரப்ப அஞ்சல் துறை முனைவெடுத்து வருகிறது.
இந்த விழாவில் அஞ்சல் துறை அதிகாரிகள், ஊழியர்கள், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சுவாமிமலையின் ஆன்மிகப் பெருமையை நிலைநிறுத்தும் வகையில் நிரந்தர அஞ்சல் முத்திரை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.