Published : 29 Mar 2023 06:49 AM
Last Updated : 29 Mar 2023 06:49 AM

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஏப்ரல் 3-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேத மந்திரங்கள் முழங்க, கோயிலின் தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்படுகிறது. (உள்படம்) விழாவையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள். | படங்கள்: பு.க.பிரவீன் |

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம்ஏப்.3-ம் தேதி நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள சிவாலயங்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மேற்கு திசை நோக்கி அமைந்திருக்கும் சிவாலயங்களில் அதிசிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரசித்தி பெற்று விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம் இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போது, கோயிலின் 4 மாடவீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருகை தருவர்.

கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி பெருவிழா நேற்று காலை 7.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்நிகழ்வுக்கு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோயிலின் கொடியேற்று மண்டபத்தில், கொடியேற்றும் நிகழ்வை பரவசத்துடன் தரிசனம்செய்தனர். தொடர்ந்து பங்குனிஉற்சவத்தையொட்டி கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சண்டிகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் முருகர் மற்றும் அம்பாள் ஆகியோர் கோயில் சந்நிதியில் இருந்து வெளியே வந்து அருள்பாலித்தனர்.

ஐந்திரு மேனிகள் வீதி உலா: விழாவின் முதல் நாளில் பவளக்கால் விமானம் மூலம் கபாலீஸ்வரர் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம்கொடுத்தார். இரவு 10 மணிக்கு அம்மை மயில் வடிவில் காட்சிதருதல் நிகழ்ச்சியும், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், முருகர் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது. இன்று தொடங்கி 10 நாட்களுக்கு பகல் மற்றும் இரவுநேரங்களில் ஐந்திரு மேனிகள் வீதி உலா நடத்தப்பட உள்ளன.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஏப்.3-ம்தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து ஏப்.4-ல் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு வீதியுலா வருதல், ஏப்.6-ல் திருக்கல்யாணம் உற்சவமும் நடைபெறுகிறது.

முன்னதாக நாளை (மார்ச்.30) இறைவன் அதிகார நந்தியில் எழுந்தருளும் நிகழ்வும், ஏப். 1-ம் தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சியும் நடைபெறவுள்ளது. ஏப்.7-ம் தேதி உமா மகேஷ்வர் தரிசனமும், பந்தம் பறி உற்சவமும் நடைபெற்று, ஏப். 8-ல் திருமுழுக்குடன் விழாவானது நிறைவடைகிறது.

மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு: மேலும், பொதுமக்கள் பாதுகாப்புக்காக 10 நாட்களுக்கு மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டம் அன்று கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், திருட்டு போன்ற சம்பவங்கள் நிகழாமல் பாதுகாக்கவும் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x