Last Updated : 17 Nov, 2016 11:07 AM

 

Published : 17 Nov 2016 11:07 AM
Last Updated : 17 Nov 2016 11:07 AM

ராமரின் தந்தையான ஜடாயு!

மாயமானைத் தேடி ராமனும் லட்சுமணனும் சென்றபோது, சீதாப்பிராட்டியைக் கடத்திச் சென்ற ராவணனிடம் போரிட்டு மாண்டவர் ஜடாயு. அவருக்குத் தனது தந்தையின் ஸ்தானத்தைக் கொடுத்து, ஜடாயுவை மதித்துப் போற்றிய ராமர், தன் அம்பினால் ஒரு புஷ்கரணியை ஏற்படுத்தினார். தன் தந்தையாகவே ஜடாயுவை ஏற்று, தர்ப்பணம் முதலான ஈமக்கிரியைகளை புஷ்கரணியின் கரையிலேயே செய்தார்.

ஜடாயு, உயிர் விடுமுன் ராமரிடம், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநாராயணப் பெருமாளாக இந்தத் தலத்தில் உறைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார். அதை ராமரும் ஏற்றுக்கொண்டார். பூமியில் ஒரு குழியை வெட்டி, ஜடாயுவை இராமர் அடக்கம் செய்த தலம் என்பதால், இதற்கு ‘திருப்புக்குழி’ (புள் என்றால் பறவை-ஜடாயு.. திருப்புள்+குழி) என்று பெயர் வழங்கலாயிற்று. வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களுள் திருப்புக்குழியும் ஒன்று.

காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் 12 கிலோமீட்டர் தூரத்தில், பாலுசெட்டிசத்திரம் எனும் ஊருக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் பிரதான சாலையிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் திருப்புக்குழி ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் ஆலயம் உள்ளடங்கி உள்ளது. ஆலயத்துக்கு முன்புறம், ‘ஜடாயு புஷ்கரணி’ என்றழைக்கப்படும் தீர்த்தக் குளம் அழகாகக் காட்சியளிக்கிறது.

அமர்ந்த திருக்கோலத்தில் மூலவர் ஆலயத்தின் மூலவர் விஜயராகவப் பெருமாள் ஜடாயுவைக் கையில் பிடித்திருக்கிறார். இருபுறமும் பூதேவி, ஸ்ரீதேவி காட்சி தருகின்றனர். அமர்ந்த திருக்கோலத்தில் மூலவர் கிழக்குப் பார்த்துக் காட்சியளிக்கிறார். ஆண்டாள் ஸ்ரீமரகதவல்லித் தாயாருக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது. மேலும், ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் ஜடாயுவுக்கும் உடையவர் ஸ்ரீராமானுஜருக்கும் ஸ்ரீவேதாந்த தேசிகருக்கும் மணவாள மாமுனிகளுக்கும் தனிச் சன்னதிகள் உள்ளன. விநாயகரும், கருடாழ்வாரும் இந்த ஆலயத்தில் உறைந்து அருள்பாலிக்கிறார்கள்.

திருமணத் தடை உள்ளவர்கள், முகூர்த்த நாளில் இங்கு வந்து தாயாருக்கு அர்ச்சனை செய்து, சன்னதிக்கு முன்பு நெய்யில் மெழுகி, சர்க்கரையில் கோலமிட்டு, தீபம் ஏற்றி வேண்டினால், திருமணத் தடை அகலும் என்பது ஐதீகம். அதேபோன்று குழந்தைகளுக்குப் பேச்சு வரவில்லையென்றால், பெருமாள் சன்னதியில் மணி வாங்கி வந்து கட்டும் வழக்கம் இருக்கிறது.

உடையவர் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து இத்தலத்துக்கு வந்து தன் குருவான யாதவப் பிரகாசரிடம் வேத பாடங்கள் பயின்றிருக்கிறார். எனவே, மாணவர் என்பதால் இங்குள்ள ராமானுஜர் கையில் தண்டம் காணப்படாது. ஸ்ரீவேதாந்த தேசிகர் 10 பாசுரங்களாலும், திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்களாலும் உடையவர் மணவாள் மாமுனிகள் ஆகியோரும் தமது பாசுரங்களால் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

உடையவர் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து இத்தலத்துக்கு வந்து தன் குருவான யாதவப் பிரகாசரிடம் வேத பாடங்கள் பயின்றிருக்கிறார். எனவே, மாணவர் என்பதால் இங்குள்ள ஸ்ரீராமானுஜர் கையில் தண்டம் காணப்படாது. ஸ்ரீவேதாந்த தேசிகர் 10 பாசுரங்களாலும், திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்களாலும் உடையவர் மணவாள் மாமுனிகள் ஆகியோரும் தமது பாசுரங்களால் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

அன்பு செலுத்துவதில் மானுடன், பறவை என்ற பேதம் அகன்று, ஜடாயுவுக்குக் காட்சி கொடுத்த ஸ்ரீவிஜயராகவப் பெருமாளையும் மரகதவல்லித் தாயாரையும் பக்தர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x